image : Naleem Haji நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை கண்ணீரற்ற கனவு தேசத்தை கனா கண்ட கதாநாயகன்
01. அழகும் அறிவும் இணைந்த பேருவளை
தனக்காக மாத்திரம் வாழும் மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தோடு முற்றுப்பெற்று விடுகின்றது. ஆனால், ஒரு இலக்கிற்காகவும் சிந்தனைக்காகவும் வாழும் மா மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தை கடந்தும் நீள்கின்றது. – வரலாற்றில் வாழ்வோர் பற்றி அரேபிய அறிஞர் ஒருவரின் கருத்து
மேல் மாகாணத்தின் மீது எனக்கு கொள்ளைப் பிரியம் இருக்கின்றது. நிறையப் பேர் நினைப்பது போன்று மேல் மாகாணம் என்பது வெறுமனே கட்டிடக் காடு அல்ல. அதனையும் தாண்டி இயற்கை எழில் அள்ளிக் கொட்டும் அழகின் அகராதிகள் நிறைந்த தேசம்தான் அது.
மேல் மாகாணத்தின் முக்கிய நகர் பேருவளை (Beruwela). கடற்கரைப் பிரதேசம். பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட தொகுதி. அதன் கடற்கரையை முத்தமிடும் கடல் அலைகளில் கால் நனைத்தவாறு அண்ணார்ந்து பார்த்தால் அகிலத்தின் அத்தனை அழகுகளையும் ருசிக்கலாம். கொழும்பிலிருந்து பேருவளை செல்லும்போது எம்மை முதலில் சந்திப்பது அதன் கடற்கரைகள்தான். இஞ்சிப் பிளேண்டியை உறிஞ்சியவாறு அந்திமாலைப் பொழுதுகளில் கடற்கரையில் மீன் வலைகளில் தமது வாழ்வை இழுத்துப் பிடிக்கும் மீனவர்களை மெதுவாக இரசிக்கலாம்.
பேருவளையின் அதீத அழகுகளில் ஒன்று அவர்கள் அசத்தல் மொழி. அவர்களால் மட்டுமே அது முடியும். ‘எனித்தியன்’ என்று ஆரம்பிப்பார்கள். ஆனால், அன்ஸாரிகளாய் மாறி கவனிப்பதில் அவர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தால் அவர்களை கட்டுப்படுத்த அவர்களால் கூட முடியாது.
வெள்ளிக் கிழமைகளில் பேருவளையின் உண்மை அழகைப் பார்க்கலாம். அதிலும் சைனா போர்ட் பக்கம் சென்றால் வெள்ளை ஆடை, கறுப்புக் கோர்ட், சிவப்புத் தொப்பி என அசத்தாக உலா வருவார்கள். இந்த பேருவளையின் இதயமாய் அமைந்திருக்கும் ஜாமிஆ நளீமா வளாகத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கதாநாயகனைப் பற்றிய நினைவூட்டல்தான் இது.
02. யார் அந்த நளீம் ஹாஜி
ஜாமிஆ நளீயாவிற்கு சென்றிருக்கின்றீர்களா?.
வாயிலில் அமைந்திருக்கும் கலைத்துவமிக்க பள்ளிவாசல் நிச்சயம் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனை கடந்து செல்லும் நீங்கள் பசுமை பூங்காவான ஒரு நந்தவனத்தை அடைவீர்கள். அங்குதான் நளீம் ஹாஜியார் எனும் மாமனிதர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் தோன்றி மறையும் அத்தனை நபர்களின் பெயர்களையும் இந்த வரலாறு பத்திரப்படுத்துவதில்லை. இலக்கிற்காக போராடும் மாவீரர்களின் வரலாறுகளை மாத்திரமே அது கொண்டாடுகிறது. அந்த வகையில் தான் கண்ணீரற்ற கனவு தேசத்தை கனாக் கண்ட, அள்ளிக்கொடுத்து கன்றிப்போன கரங்களையுடைய, அல்லாஹ் தந்த செல்வங்களை அவனது பாதையிலேயே செலவளிப்பதில் அதீத ஆனந்தம் கொண்ட நளீம் ஹாஜியாரை மட்டும் இந்த வரலாறு மறந்துவிடுமா?
களுத்துறை மாவட்டம் பேருவளை நகரில் 1933, ஏப்ரல் 4ஆம் திகதி நளீம் ஹாஜியார் முஹம்மத் இஸ்மாஈல்- ஷரீபா உம்மா ஆகிய தம்பதியினருக்கும் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். பிறந்த நொடியில் வீட்டின் ஒரு பக்கம் வறுமையும் மறுபக்கம் ஏழ்மையும் பசியால் வீரிட்டலறி அழுதுகொண்டிருந்தன. அந்த அப்பாவி வீட்டில் அடுத்த வேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் இருக்கவில்லை. அக்காலத்தின் பிரபல சடங்கான நாற்பதாம் நாள் விசேடம் கூட அவர்களுக்கு பெரும் தலையிடியாய் மாறியது. அடுத்த தோட்டத்தில் வீழ்ந்து கிடந்த பலாக்காய்தான் அந்த தலையிடியை தீர்த்தது.
சிறுவன் நளீமை கொடிய வறுமை கொத்துக் கொத்தாய் பீய்த்தெறிந்தது. சில நாட்கள் ஆப்பம் விற்றுவிட்டுத்தான் அவர் பாடசாலை சென்றார். எஞ்சிய அப்பங்கள்தான் சிலவேளை அவர்களது முழுநாள் பசியைத் தீர்க்கும். இளமையில் வறுமை எவ்வளவு கொடியது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் அந்தச் சிறுவனால் பாடசாலைக்கு போக முடியவில்லை. வறுமை குறுக்கே நின்றுவிட்டது.
பாவம் அவரின் தாய் ஷரீபா உம்மா! .வீசும் கடலின் ஊதற்காற்றில் இருந்து தன்னை பாதுகாக்க போதிய ஆடையுமின்றி, இரவு முழுவதும் கயிறு திரித்துக்கொண்டிருப்பாள். தன்னருகே கிழிந்த சாக்கை போர்த்திக்கொண்டு தூங்கும் மகனை பார்த்து அடிக்கடி பெரு மூச்செரிந்து கொள்வாள். அவர் இரவு முழுக்க திரித்த கையிறை கொண்டுதான் அடுத்த நாள் அந்த குடும்பம் பசியாறும்.
இவ்வளவு கொடிய வறுமையினால் அந்த சிறவனால் ஐந்தாம் தரத்திற்கு மேல் பாடசாலையில் கற்க முடியவில்லை. கூலி தொழிலில் இறங்கிய அவர் அதனோடு மட்டும் திருப்திப்பட வில்லை. வியாபாரத்தில் இறங்கி அல்லாஹ்வின் அற்புத அருளாலும் தனது அரும் முயற்சியாலும் மாபெரும் வியாபாரியானார். தனது பணத்தை தனது இரும்பு பெட்டிக்குள் மட்டும் சுருக்கி வைக்கவில்லை. தான் அனுபவித்த எந்தவொரு கஷ்டத்தையும் இனி யாரும் சந்திக்க கூடாது என்ற இலக்கில் செலவளித்தார்.
03. நளீம்ஹாஜியாரின்சாதனைகள்.
1. 1972யில் ஜாமிஆ நளீயாவை உருவாக்கினார். வரலாற்றை மாற்றும் கதாநாயகர்களாக நளீமிக்கள் சமுகத்தில் பனியாற்ற வேண்டும் என்ற கனவுடன் நளீமியா இஸ்லாமிய நந்தவன பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
2. 1985 இக்ரஃ தொழிநுட்ப கல்லூரியை உருவாக்கினார். மாணவர்கள் தொழிநுட்ப அறிவில் சாதிக்க வேண்டும் என்ற கனாவுடனும் அவாவுடனும் இக்கல்லூரி உருவாக்கப்பட்டது.
3. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக புலமைப்பரிசில்களை வழங்கினார்
4. இலங்;கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார. இலங்கை முஸ்லிம்கள் என்றும் எங்கும் எப்போதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற இலக்குடன் இலங்கை மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
5. எண்ணற்ற ஏழைப்பெண்களின் திருமண வாழ்க்கைக்கு உதவினார்
6. பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் மைதானங்களை உருவாக்கிக்கொடுத்தார். பேருவளையில் நளீம் ஹாஜியார் ஸ்டேடியத்தை கட்டிக்கொடுத்தார்.
7. இலங்கை அரசாங்கத்தின் அந்நிய நாட்டு செலாவணி நெருக்கடிக்குள்ளான போது 15 இலட்சம் அந்நிய செலவானி பணத்தை வழங்கினார்.
8. இலங்கை முஸ்லிம் சமுகம் வரலாரற்ற சமூகமாகி விடக் கூடாது என்று கலாநிதி சுக்ரி அவர்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொகுக்க காரணமாக அமைந்தார்.
9. இந்தியாவிலும் வைத்தியசாலைகள், பாடசாலைகள், பள்ளிவாயல்கள் கட்டிக்கொடுத்தார்.
10. யமன் நாட்டின் அப்பாவிகளுக்கு குடிநீர் வசதிகளை அமைத்துக்கொடுத்தார்.
பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது சிலருக்கு நல்ல மனது இருக்கும். இன்னும் கொஞ்சம் சம்பாதித்தவுடன் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என மனம் நாடும். பல சமூகத் திட்டங்களை தீட்டும். ஆனால், அறை முழுக்க பணம் நிறைந்தால் அவ்வளவுதான். மனது பெல்டி அடித்துவிடும். இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என அலைபாய தொடங்கிவிடும். யாராவது கை நீட்டினால் கூட கண்கள் முழுக்க கஞ்சத்தனம் வடிய ஆரம்பித்துவிடும்.
ஆனால், ஹாஜி நளீம் அப்படியல்ல.
அவருக்கு அள்ளிக் கொடுப்பதில் அலாதி ஆனந்தம் இருந்தது. ஆனால், தனது தான தர்மங்கள் வெறும் பசியை போக்குவதோடு நின்று விடக் கூடாது.
சமூகம் தன் கண்ணீரைத் துடைக்க வேண்டும்.
அதற்கு உருக்கிலான முள்ளந்தண்டு வேண்டும்.
அது எப்போதும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.
அது தனது வரலாறு அறியாமல் வாடக் கூடாது.
வெறுமனே உலகக் கல்வியில் சுருங்கி விடக் கூடாது. மார்க்க கல்வியில் ஒதுங்கிவிடக் கூடாது. என ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு சதத்தையும் திட்டமிட்டு பயன்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.
அல்லாஹ் தமக்கு வழங்கும் பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்று வாழ்நது காட்டியவர் அவர். இளமையில் வறுமை தீயில் அகப்பட்டு துன்பப்பட்டபோது மடடுமல்ல, பிற்காலத்தில் தொடர்ந்த அத்தனை சோதனைகளிலும் போதனைகளை கற்று சாதனைகள் படைத்தார். 2005ஆம் ஆண்டு அவர் மறைந்த போது அலை மோதி, கண்ணீர் வடித்த ஆயிரமாயிரம் உள்ளங்கள் அவரது தூரநோக்கு சிந்தனைக்கும் அள்ளிக்கொடுத்து கன்றிப்போன கரங்களுக்கும் சான்று. இன்னும் கூட அவருக்கான பிரார்த்தனைகள் பெருங்கடலாய் சென்று கொண்டிருக்கின்றன. அவர் அடக்கப்பட்ட நளீமிய வளாகத்தில் நடை பயிலும் மாணவர்கள் மட்டுமல்ல.. ஆயிரம் ஆயிரம் உள்ளங்கள் அவருக்காய் கை ஏந்துகின்றன. நாமும் அதில் இணைந்து கொள்ளலாம்.
04. இன்னொரு நளீம் ஹாஜியார்
பணம் சம்பாதிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால், அது சம்பாதிக்கும் வழி ஹலாலாக அமைய வேண்டும் என்றும் அது செலவளிக்கும் வழி அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்றதாகவும் அமையவேண்டும் என்றே நாடுகிறது.
ஒரு முறை மஃரிப் நேரம்.
நளீமியா வளாகத்தில் கால் பதித்திருந்தேன்.
தொழுகை முடிந்து விட்டது.
நளீமியா மாணவர்கள் விடுதிக்குச் செல்லவில்லை.
சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லவில்லை.
நந்தவனத்தை நோக்கி நடந்தார்கள்.
அங்கேதான் அந்த நல்ல மனிதர் நிரந்தரமாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்தித்தார்கள்.
எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அதிகமாகவே… இதற்குப் பொறமைப் படாமல் வேறு எதற்கு படுவது..
வற்றாத செல்வத்தின் உடைமையாளர்.
வாடிடாத பெரு மனதின்
உரிமையாளர்.
இப்போது நிரந்தர நன்மைகளின் நிழலில்
நிம்மதியாக தூங்குபவர்.
அள்ளிக் கொடுத்து கன்றிய கைகள்.
ஆனால், விட்டுவிடாத பெரும் சேவை.
ஏழை கண்ணீர் துடைத்த திருப்தி.
எளியவர்களை காணுகையில் இதயத்தின் ஓரம் தீப் பொறி.
இன மதமற்ற சேவை.
வரலாறு அறியாமல் – வந்த தடம் புரியாமல்
வடி நின்ற நமக்கு வாழ்வளித்த வள்ளல்.
இன்னொரு நளீம் ஹாஜியாராக (நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை) நீங்கள் வர தாயாரா?




Leave a Reply