ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா
2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம். இஸ்ரேல் காஸாவை குண்டுவீச்சுகளால் நிரப்பி, வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடுத்து நிறுத்தி ஒரு ஆக்கிரமிப்புக் கெதிரான விடுதலைப் போரை பட்டினியென்ற போராயுதத்தால் நசுக்கிக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் அதுவும், காஸாவின் வீதிகளில் சுமார் 5,000 குழந்தைகளும் 14,000 பெண்களும் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த குருதி தோய்ந்த பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவியேற்பிற்குப் பின் வளைகுடா நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
ஒருபுறம் சொந்த ரத்த சகோதரர்களின் மரண ஓலம் வளைகுடாவின் காற்றில் கலந்திருக்க, மறுபுறம் சவூதி அரேபியா தனது செங்கம்பளத்தை விரித்து ராஜமரியாதை செய்ததும், துபாய் தனது பாரம்பரிய உபசரிப்புகளுடன் வரவேற்றதும் உலக மனிதாபிமானத்தின் மீதான மிகப்பெரிய கேலிச்சித்திரமாக அமைந்திருந்த காட்சிகள்.
அன்றைய ட்ரம்பின் விஜயம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் போர்க்குற்றங்களுக்கு எதிராக எட்டும் இராஜதந்திர முடிவுகளின் நகர்தலாகவோ அல்லது பிராந்திய அமைதியைத் தருவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதே இன்றைய உண்மையாகிறது. மாறாக, வளைகுடா நாடுகளின் அபரிமிதமான செல்வத்தைக் கண்டு வியந்த ஒரு முதிர்ந்த வியாபாரியாக, அந்தச் செல்வத்தை எப்படிக் கையகப்படுத்துவது என்ற தந்திரத்துடனேயே அவர் அங்கே கால்பதித்திருக்க வேண்டும். ஏனென்றால் சவூதி மற்றும் கத்தாரின் நவீன வளர்ச்சியையும் அங்குக் கொட்டிக்கிடந்த செல்வத்தையும் கண்ட ட்ரம்ப்பிற்கு, வளைகுடா நாடுகள் இறையாண்மை கொண்ட தேசங்களாக இருப்பதை விரும்பவில்லை. அவை வெறும் ‘வாடிக்கையாளர்களாகவே’ தெரிந்திருக்க வேண்டும்.
கத்தார் அரசு அவருக்கு வழங்கிய 400 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு விமானம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பரிசுகளைப் பெற்றுக்கொண்ட போது, “இவர்கள் பெரும் செல்வத்திலேயே வாழ்கிறார்கள், அதில் ஒரு சிறு பகுதியைத் தந்தது ஒரு பெரிய விஷயமே அல்ல” என்று அவர் குறிப்பிட்டது, அந்த நாடுகளின் தலைவிதியைத் தனது கைகளில் வைத்திருப்பதாக அவர் நினைக்கும் மேலாதிக்கப் பார்வையின் உச்சமாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகளின் செல்வம் நிலைக்க வேண்டுமானால் அங்கே அமைதி நிலவக்கூடாது என்பதில் ட்ரம்ப் தெளிவாக இருந்திருக்க வேண்டும் . அதனால்தான், ஈரானை ஒரு ‘பேயாகக்’ காட்டி வளைகுடா நாடுகளைத் திகிலூட்டி, ஒரு பிராந்தியப் போருக்கான அஸ்திவாரத்தை இட்டிருக்கிறார். இன்று வளைகுடா பற்றி எரிவதற்கும், ஈரான் போரின் உக்கிரம் அதிகரிப்பதற்கும் ட்ரம்ப் அன்று திட்டமிட்டு விதைத்த அந்த ‘வியாபாரப் பயமே’ அடிப்படை காரணமாகும்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அமெரிக்கா எப்போதும் ஒரு பிராந்தியத்தின் வளங்களைச் சுரண்ட அங்கு ஒரு பொதுவான எதிரியைக் கட்டமைக்கும். லிபியா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என ஈரானைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நாடுகளையும் கொத்திச் சிதைத்துப் பழகிய அமெரிக்கா எனும் ‘மரங்கொத்தி’, அதே தெம்பில் ஈரானை (வாழைமரத்தை) ‘ இன்று கொத்தத் துணிந்திருப்பது பேராசையின் உச்சம். ஆனால், ஈரானைத் தனது கடந்தகால பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் எளியவனாக்கிவிட்டோம் என்று அமெரிக்கா போட்ட கணக்கு இன்று யுத்த களத்தில் தவிடுபொடியாகி வருகிறது. ஈரான் இன்று அமெரிக்காவின் கழுத்தைச் சுற்றி இறுக்கும் வேலையை மிகக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கி, அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேற்றும் தந்திரத்தைக் கையாள்வதுடன், உலகின் பொருளாதார அச்சாணியையும் தனது பிடிக்குள் வைத்துச் சுழற்றுகிறது.
மறுபகுதியில் ட்ரம்ப்பின் வியாபார நோக்கம் இங்கு யாருக்கும் தெரியாமல் அரங்கேற்றப் படுவதை உன்னிப்பாகக் கவனித்தால் அறிந்து கொள்ள முடியும் . ஏனெனில், வளைகுடா எரியும் போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடுகிறது. இந்தத் தீயின் வெளிச்சத்தில் அமெரிக்கா தனது சொந்த எண்ணெய் வர்த்தகத்தை லாபகரமாக நடத்தி, உலகிற்குத் தான் மட்டுமே எரிசக்தி வழங்க முடியும் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதங்களை விற்றுப் பணத்தைச் சுரண்டுவதும், மறுபுறம் வளைகுடா எண்ணெயைத் தடுத்துத் தனது சொந்த எண்ணெயைச் சந்தைப்படுத்துவதும் என இருமுனை லாபத்தை அமெரிக்கா அறுவடை செய்கிறது.
இதனால் தான் இஸ்ரேலைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் சவூதி, கத்தார், பஹ்ரைன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் பாதுகாப்பை அவர் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார். இதனை இன்று வளைகுடா அமைச்சர்களே பகிரங்கமாகக் கூறித் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றமை காலம் கடந்த ஞானமாகவே கொள்ள வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்காவிற்குப் பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்த நாடுகள், இன்று நடுத்தெருவில் கைவிடப்பட்டிருப்பதுதான் அந்த ‘ஓட்டையான’ வளைகுடா வளங்களின் நிதர்சனமாக அமைந்துள்ளது.
வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் தாக்கப்படும் போது, அங்கே வளைகுடாவின் பாதுகாப்பும் பொருளாதாரமும் பாரிய சேதங்களை அடைந்துள்ளன. இதற்குச் சிறந்த உதாரணம், உலகின் அமைதிப் பூங்காவாகவும் பொருளாதார மையமாகவும் திகழ்ந்த துபாய். இன்று துபாய் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளதுடன், அதன் முதலீடுகள் அனைத்தும் போர் அச்சத்தால் சிதறி ஓடுகின்றன.
இன்று அமெரிக்கா தனது இராணுவ நிலைகள் தாக்கப்படும் போது, அங்கே தொடர்ந்து இருக்கவும் முடியாமல், கௌரவத்தை இழந்து வெளியேறவும் முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக தெரிந்தாலும் ட்ரம்ப்பின் பாவனை, பேச்சு, சிரிப்பு என அனைத்துமே பணம் சார்ந்தது மட்டுமே என்பதை நடப்பு யுத்தம் நன்றாக விளக்கிக் கொண்டிருக்கின்றது.
மனிதாபிமானத்திற்குத் துளியும் இடமில்லாது அவர் விடும் அறிக்கைகள் உலகிற்குத் தெளிவாக அறிவிக்கும் சேதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சான்றுகளையும் கோர முகங்களையும் மட்டுமே. வளைகுடா நாடுகளின் செல்வத்தைப் பார்த்து மலைத்த அந்த நொடியே, அந்த நாடுகளை ஒரு போர்க்களமாக மாற்றி அவர்களின் சேமிப்பை அமெரிக்காவிற்கு ‘ஆயுதக் கட்டணமாக’ வசூலிக்க அவர் முடிவு செய்துவிட்ட தருணம்.
ஆனால், “மரங்கொத்தியின் மிதப்பு வாழைமரத்தைக் கொத்தித் தன் கூரிய அலகினை (வலிமையை) உடைத்துக்கொண்ட” பழமொழியைப் போல, ஈரானைச் சீண்டியதன் மூலம் அமெரிக்கா என்ற மரங்கொத்தி இன்று தனது உலகளாவிய ஆதிக்கத்தின் இறுதி அத்தியாயத்தை வளைகுடா மண்ணிலேயே எழுதிக்கொண்டிருக்கிறது. ஈரானின் வியூகங்கள் இன்று அமெரிக்காவின் கழுத்தை நெரிப்பதோடு மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளை அமெரிக்காவின் பிடியிலிருந்து விலகி மாற்று சக்திகளை நோக்கி நகரவும் தூண்டியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாதுகாப்பு என்ற போர்வையில் எண்ணெய் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டிய அமெரிக்காவின் ஆதிக்கம், ஒரு வியாபாரியின் பேராசையினால் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. காஸாவின் சாபமும், வளைகுடாவின் எரியும் சூழலும் ஒரு உண்மையை உரக்கச் சொல்கின்றன: வியாபாரிகள் ஒருபோதும் அமைதியைக் கொண்டு வரமாட்டார்கள், அவர்கள் அழிவின் மூலமே லாபம் பார்ப்பார்கள். இந்த அழிவுப் பாதையில் ட்ரம்ப் மூட்டிய தீ, இறுதியில் வளைகுடாவை மட்டுமல்லாது அமெரிக்காவின் உலகளாவிய வல்லரசு என்ற பிம்பத்தையுமே சாம்பலாக்கிவிடும் என்பதுதான் நிதர்சனம்.




Leave a Reply