அன்புள்ள மகளுக்கு,
(அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்)
உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த உரையாடல்கள்தான் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள அன்புக்கு அழகு வழங்குகின்றன. அந்த அன்பை உயிர்ப்பாக்குகின்றன.
அன்பு மகளே,
நேற்றுதான் உன்னை கையில் ஏந்தியது போன்று இருக்கின்றது. கண்ணை மூடி திறப்பதற்குள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாய். எனக்கே மலைப்பாக இருக்கின்றது.
நீ எனக்கு எப்போதும் கண்குளிர்ச்சிதான். இந்த வாழ்வின் அழகான நாட்களை நீ எனக்கு பரிசளித்திருக்கின்றாய். ஒழுக்கத்திலும் கல்யிலும் நீ அடையும் வெற்றிகள் என்னை மிகவும் மகிழ்வித்திருக்கின்றன. நீ என்னோடும் உன் தாயோடும் அன்பாகவும் ஆறுதலாகவும் மரியாதையாகவும் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை மகிழ்விக்கின்றன.
மகளே, என் தங்கமே, என் உயிரே
உனக்கு இன்னொரு விடயத்தைச் சொல்லத்தான் இந்தக் கடிதத்தை வரைகின்றேன். நல்ல விடயங்களை ஒருவருக்கொருவர் நினைவூட்டுவது நல்ல விடயம்தானே!
நான் உன் தோழிகளைப் பற்றி பேச வேண்டும். ஏனென்றால் ‘மனிதன் அவனது நண்பனின் வழியில் இருக்கின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எமது வெற்றியையும் தோல்வியையும் நண்பர்கள்தான் முடிவு செய்கின்றார்கள். எமது வாழ்வில் அவர்கள் செலுத்தும் தாக்கம் அலாதியானது.
நமது நண்பர்கள் பற்றி நாம் சில பொழுதுகளில் அறிந்து கொள்ளலாம்.
1. அவர்கள் அதிகம் எதைப் பற்றி உரையாடுகின்றார்கள்?
2. நமக்கு துன்பம் வரும்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?
3. நமக்கு அவர்கள் உபதேசம் செய்யும் விடயங்கள் எவை?
4. அவர்களது பண்பாடுகள் எவ்வாறானவை?
5. எமது வாழ்வின் கடினமான பொழுதுகளில் அவர்கள் எவ்வாறு உதவுகின்றார்கள்?
6. கல்விக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்குகின்றார்கள்?
7. பாடசாலை பற்றி, ஆசிரியர்கள் பற்றி அவர்களின் மனப்பதிவுகள் எவை?
இது போன்ற வினாக்களைப் பற்றி ஆராய்வதன் மூலம் நமது நண்பர்களைப் பற்றி நாம் ஓரளவேனும் அறிந்து கொள்ளலாம்.
(அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்)
01. கல்விக்கு முக்கியம் கொடுக்காத கலகலப்பு
சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எம்மை குழுங்கிக் குழுங்கி சிரிக்க வைக்கும். அவர்களின் ஒவ்வொரு செயலும் எமக்கு சிரிப்பூட்டும். ஆனால், சிலபொழுதுகளில் அவர்கள்தான் எமது கல்விக்கு மிகப்பெரும் தடையாக இருப்பார்கள். சிலபொழுதுகளில் வகுப்பறைகளில் சிரித்துக் குழுங்கும் நாம் பரீட்சைகளின் போது அழ வேண்டியிருக்கும்.
- Negative மனிதர்கள்
சில நண்பர்கள் எப்போதும் மறையாகவே (Negative) பேசுவார்கள். யாரைப் பற்றியும் அவர்களிடம் எந்தவொரு நல்ல பார்வையும் இருக்காது. வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கொஞ்சம் பேச ஆரம்பித்தாலே தலையிடி வந்துவிடும். ஆயிரம் பொற்காசுகளின் நடுவே ஒரு காய்ந்த இலை இருக்கின்றது என்றால் – அந்த இலை பற்றியே ஒப்பாரி வைப்பார்கள். பெறுமதியான பொற்காசுகள் பற்றி பேச மாட்டார்கள். இவ்வாறானவர்களை விட்டும் தவிர்ந்து கொள்.
- வீண் செலவு செய்பவர்கள்
இடைவேளைகளில் சிற்றுண்டிச் சாலை செல்கின்றோம். வேண்டிய உணவுகளை வாங்கிச் சாப்பிடுகின்றோம். நண்பர்களோடு ஒன்று சேர்கின்றோம். ஆசைக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடுகின்றோம். இவற்றில் எவ்வித தவறும் கிடையாது. ஆனால், சில நண்பர்கள், தோழிகள் வீண் செலவு செய்வதையே குறியாக வைத்திருப்பார்கள். ஏதாவது செலவு செய்யாவிட்டால் அவர்களுக்கு தலைவலி வந்துவிடும். தமது வீண் செலவுக்கு பணம் தராத பெற்றோர்களோடும் அடிக்கடி முரண்பட்டுக் கொள்வார்கள். இந்தச் சின்னஞ் சிறு வயதிலேயே கடன் வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.
- பருவ வயது பலியாடுகள்
இன்றைய திரைப்படங்களில் காதல் என்பது கட்டாய கடமையாக காட்டப்படுகின்றது. ஆனால், அது ஒரு மாய விம்பம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அது தெரியாமல்தான் பலர் பலியாகின்றார்கள். பாவம். கற்க வேண்டிய வயது இது. சாதிக்க வேண்டிய வயது இது. ஆற்றல்களை வளர்க்க வேண்டிய வயது இது. சிகரத்தை நோக்கி சிறகுகளை விரிக்க வேண்டிய வயது இது.
பெரும்பாலான பொழுதுகளில் மாணவர்கள் இந்த பருவ விளையாட்டில் விலைபோக அவர்களது தோழர்கள்தான், தோழிகள்தான் காரணமாக அமைந்து விடுகின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு கேளிக்கை. அல்லது கும்மாளம்தான். ஆனால், இறுதியில் விளையாட்டு விபரீதமாகி கல்விதான் காணாமல் போய்விடும்.
- ஆசிரியர்கள் பற்றி தவறான விம்பத்தை உருவாக்குபவர்கள்
ஒரு சில தோழிகளுக்கு சில ஆசிரியர்களைப் பிடிக்காது. இது இயல்பானதுதான். அனைவரையும் பிடிக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஆனால், சிலர் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வெறுப்பார்கள். அந்த வெறுப்பை மற்றவர்களுக்கும் பரப்புவார்கள்.
ஆசிரியர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டால் பாடசாலை மீதும் படிப்பு மீதும் வெறுப்பு வந்துவிடும். இதனால் ஆசிரியர்களுக்கு எந்தவொரு நஷ்டமும் கிடையாது. பிள்ளைகள்தான் பாவம்.
உனது தோழிகள் ஆசிரியர்கள் பற்றி சொல்லும் சங்கதிகளில் கவனமாயிரு என் மகளே..
- உரிய வாழ்க்கை கோலம் இல்லாதவர்கள்
தோழிகளின் வாழ்க்கை கோலம்தான் எமது வாழ்க்கை கோலத்தையும் பாதிக்கின்றது. அதனால்தான் தோழர்களை, தோழிகளை தெரிவு செய்யும் இடத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சிலர் இரா முழுக்க விழித்துக் கொண்டிருப்பார்கள். வெகு நேரம் கழித்தே எழுந்திருப்பார்கள். பரீட்சைக்கு முதல் நாள் கூட பாடப் புத்தகங்களை புரட்டாமல் தொலைபேசியில் நீந்திக் கொண்டிருப்பார்கள். அதிகாலை உணவு உண்ண மாட்டார்கள். ஆனால், இரவு வெகு நேரம் கழித்து துரித உணவுகளை விழுங்கித் தொலைப்பார்கள். பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வேறு யாருக்கோ கொடுப்பார்கள். இவர்கள் அசாதாரணமானவர்கள். அவர்களோடு சேர்ந்தால் நமக்கும் ஆபத்துதான்.
அன்புக்குரிய மகளே,
மனிதர்களில் கழிவுகள் இல்லை. ஒவ்வொருவரும்ரத்தினங்கள். ஒவ்வொருவரும்மரகதங்கள். நாம் அனைவரோடும்சமனாக பழக வேண்டும். தோற்றம், இனம், மதம், மொழி, செல்வம் என யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால், உயிர்த் தோழிகளை தெரிவு செய்யும்போது நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களின் பழக்க வழக்கங்கள் எமக்கு இயல்பாக வந்துவிடும். காலப்போக்கில் நாம் அவர்களாகவே மாறிவிடுவோம்.
பொய்யா மொழிப் புலவரும் நல்ல நட்பு பற்றி ஏகப்பட்ட விடயங்களை கூறியுள்ளார். அவற்றுள் எனக்குப் பிடித்த குறள் இது.
அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின் கண்
அல்லல் உழப்பதாம் நட்பு (குறள்) (787)
நல்ல நட்பு என்பது துன்பத்தில் கை விடாது. தீய வழியில் செல்வதைத் தடுக்கும். நல்லவற்றை போதிக்கும்.
நல்ல நட்புக்களைப் பெற்று நீயும் நலவுகள் பல பெற்று வாழ வேண்டும் என நானும் வாழ்த்துகின்றேன் எந்தன் மகளே..
அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்




Leave a Reply