அன்று சனிக்கிழமை
வாப்பாவை கையில் பிடிக்க முடியவில்லை. இன்று ஒரு வேலையும் இல்லை என்பதால் மகளைப் பார்க்க புறப்பட்டு விட்டார். வீட்டிலிருந்து மகளின் வீடு அரை மணித்தியால தூரம்தான். ஆனாலும், படு குஷியாய் தயாராகிக் கொண்டிருந்தார். சலூனுக்குப் போய் முடி வெட்டி உள்ளதிலேயே நல்ல சேர்ட்டைப் போட்டுக் கொண்டு மகளுக்குப் பிடித்த பூந்தியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். உம்மாவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது. இப்பபோது என்றில்லை. மகள் பிறந்ததில் இருந்தே அந்த வயிற்றெரிச்சல் ஆரம்பித்து விட்டது.
உம்மா வாப்பாவிடம் என்ன கேட்டாலும் அது வந்து சேர நான்கைந்து நாட்களாகிவிடும். சில சமயம் உம்மா கேட்டதே வாப்பாவுக்கு மறந்துவிடும். இல்லாவிட்டால் உம்மா என்னமோ கேட்க வாப்பா வேறு எதையோ வாங்கி வந்து வசமாக மாட்டிப்பட்டு கல்லை விழுங்கிய பூனை போல முழிப்பார். ஆனால் மகள் ஒரு விஷயத்தை கேட்டுவிட்டால் அவ்வளவுதான். அதை வாங்கிக் கொண்டு வந்து அவளின் கைகளில் கொடுக்கும் வரை அவருக்கு தூக்கம் போகாது. இமயமலையில் இருந்தாலும் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்.
அம்னாவுக்கு ரொம்பப் பிடித்த விடயங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அதேவேளை கொஞ்சம் விசித்திரமானது.
புளிமரங்களில் காய்த்துப் பூத்திருக்கும் பிஞ்சு புளியங்காய்கள் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். செக்கச் செவேல் என பூத்திருக்கும் சிவப்பு பூந்தி என்றாள் அவளுக்கு உயிர். பெரிய ஹாஜியாரின் வீட்டு வளவில் விழுந்திருக்கும் விளாங்காய்களைக் கொண்டு வந்து கொடுத்தால் அவளைக் கையில் பிடிக்க முடியாது. நீண்ட வருடத்தின் இடைவெளியில் கிடைக்கும் நாவற்பழங்கள்.. கொடிய வெயிலின் போது ஐஸ் கட்டிகள் நிறைத்துத் தரும் இளநீர் நுங்கு… ஸ்கூல் வாசலடியில் முஹைதீன் மாமா விற்கும் அச்சாறு…என அவளுக்குப் பிடித்த ஏகப்பட்ட விடயங்கள் இருந்தன.
வாப்பாவின் மோட்டார் சைக்கள் அசைந்தாடிபடி சென்று கொண்டிருந்தது. அதோ… அதுதான் அவரது தேவதை வாழும் வீடு. அந்த ஏரியாவிலேயே மிகப்பெரிய ஜமீன்தார் வீடு. கம்பீரமாக எழுந்து நின்றது. அந்த பெரிய வீட்டில்தான் தன் மகள் மகாராணி போன்று வாழ்கின்றாள் என்பதை நினைத்துப் பார்த்தபோது வாப்பாவால் மகிழ்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைப்பிடியளவு கர்வமுமும் சத்தமின்றிச் சுரந்து வாப்பாவின் முள்ளந்தண்டை கொஞ்சம் நிமிர்த்தியது.
ஆனால்
ஏன் இத்தனை சனம் எதற்காக வீட்டைச் சுற்றி இத்தனை பொலிஸ்காரர்கள் இருக்கின்றார்கள்..!
வாப்பாவின் மனது படபடக்க ஆரம்பித்துவிட்டது. பயத்தில் கொஞ்சம் நெஞ்சு வலிப்பது போலவும் இருந்தது. ஒருவாறு உயிருக்குள் ஆங்காங்ககே சிதறிக் கிடந்த தைரியத்தைச் சேகரித்துக் கொண்டு மெதுவாய் எட்டிப் பார்க்க… அங்கே அவர் கண்ட காட்சி… அவரது மருமகனை நான்கைந்து பொலிஸ்காரர்கள் தரதரவென இழுத்துக் கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவனோ கோபம் தலைக்கேறி அம்மணமான வார்த்தைகளால் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான்.
வாப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மோட்டார் சைக்களை ஒரு பக்கம் புரட்டிவிட்டு அவர்களிடம் படபடவென ஓடினார்.
‘ஐயோ மஹத்தியா.. என் மருமவன் ரொம்ப நல்லவர். எந்தவொரு தப்புத் தண்டாவுக்கும் போயிருக்க மாட்டார். அவரை விட்டுடுங்க’ என அவர்களின் காலில் விழாக் குறையாக கெஞ்ச ஆரம்பித்தார்.
அதனைக் கேட்டதும் பொலிஸ் மஹத்தியாவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. சத்தம் போட்டே சிரித்து விட்டார். ‘என்னது.. உனது மருமகன் நல்லவனா… இந்த ஏரியாவுக்கே போதைப் பொருள் சப்ளே பன்னிக் கொண்டிருந்தவன்தான் உன்ட மருமகன். இத்தனை நாளாக அவனைத்தான் தேடிக் கொண்டிருந்தோம். இன்றுதான் வசமாகச் சிக்கினான்’ என கர்ஜித்துக் கொண்டே அவர் ஜீப்பில் ஏறினார்.
என்ன நடக்கின்றது என்று புரியாமல் வாப்பா திரும்பிப் பார்க்க… அங்கே அவரது செல்ல மகள் மழையில் நனைந்த ஓவியம் போல கசங்கிப் போய் நின்றிருந்தாள். அவளது கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளே பொலிஸ் மஹத்தியா சொன்ன அனைத்து விடயங்களும் உண்மை என்று சத்தியம் செய்தன.
அவளின் இதழோரத்தில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கன்னத்தில் கை விரல்கள் ஐந்தும் ஆழமாய் பதிந்திருந்தன. பொலிஸார் வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னர்தான் அஸ்ஜத் ஏதோ வாக்குவாதத்தில் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
பாவம் வாப்பா
மொத்தமாக நொடிந்து விட்டார்.
அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
ஆயிரம் வருடங்களாகச் சிறுகச் சிறுகச் செதுக்கிய கண்ணாடிச் சிற்பம் கண் முன்னே விழுந்து சிதறுவதை எவ்வாறு ஜீரணித்துக் கொள்ள முடியும்?




Leave a Reply