இரண்டு நாட்கள் கடந்துவிட்டன.
ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டவாறே வெறியே வந்து நின்றாள் அம்னா. மழை வேறு பெய்வோமா வேண்டாமா என சீரியஸாக சிந்திக் கொண்டிருப்பது புரிந்தது. எதற்கும் தேவைப்படும் என குடையை எடுத்துக் கொண்டாள். லோசாக தலைவலிப்பது போல வேறு இருந்தது. ஆனால், வீட்டில் இருந்தால் உம்மாவின் தொனதொனப்பில் அது இரட்டிப்பாகிவிடும் என்ற அச்சமிருந்ததால் தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினாள். இரவு முழுக்க உம்மா பெரும் ஆர்ப்பாட்டமொன்று செய்து தீர்த்துவிட்டார். அம்னாவை அடுத்த திருமணத்திற்கு தாயாராகுமாறு அழுது தீர்த்தார். அவரின் கவலையிலும் நியாயம் இல்லாமலில்லைதானே.. தன் மகளின் வயதையொத்த அடுத்து வீட்டு புள்ளைகள் எல்லாம் புருஷனோடும் புள்ளைகளோடும் குடும்பம் குட்டியாக வாழ்வதை பார்க்கும்போது தனது மகள் மட்டும் தனிமரமாய் தவித்து நிற்பதைப் பார்க்க எந்தத் தாய்க்குத்தான் மனம் பொறுக்கும்..
ஆனால், அவளுக்கு மட்டும் அடுத்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்றா சொல்கிறாள்.. இல்லையே… ஆரம்பத்தில்; ஆழமாக பட்ட காயம் இன்னும் அவளது மனதை விட்டு அகலவில்லை. எப்படி அந்தக் காயம் அவ்வளவு சீக்கிரமாக ஆறும். உடல் பற்றியெரிந்தால் ஆறிவிடும். ஆனால், உயிர் பற்றியெரிந்த காயம் அவ்வப்போது தன்னைத்தானே கிழறிக் கொண்டு ஓலமிட்டுக்கொண்டே தானே இருக்கும்.
அம்னா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
விதி பற்றி அவளுக்குத் தெரியும். நாம் என்னதான் தலைகீழாக நின்று தவம் செய்தாலும் சில நாய்களிடம் கடிபடத்தான் வேண்டும். ஆனால், எல்லாம் இறைவன் என்றோ எழுதிவைத்தது. எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நாயிடம் கடிபட்டால் மருத்துவரிடம் சென்று தடுப்பூசி போட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போக வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டவளாக நடையின் வேகத்தைக் கூட்டினாள்.
நீண்ட நேரம் செல்லவில்லை.
எதிரே அவளது தோழி சியாமா பதறித் துடித்தவாறு ஓடி வந்தாள். ‘இந்தக் காலையில் இவளுக்கு என்ன நடந்த..’ என நினைத்தவாறு அம்னா நடையின் வேகத்தைத் தளர்த்த அதற்குள் சியாமா அருகே வந்துவிட்டாள். நீண்ட தூரம் ஓடி வந்ததால் அவளுக்கு மூச்சு இரைத்தது. பேச்சு வரவில்லை. கொஞ்சம் ஆசுவாசப்பட்டுத்திக் கொள்ளட்டும் என அம்னா பொறுமையாக இருந்தாலும் சியாமாவுக்கு பொறுமை என்பது அறவே இன்றி காணாமல் போயிருந்தது. ஏதோ கலவரத்தில் அவளது முகம் மையத்துவீட்டு தாழ்வாரமாக மாறியிருந்தது.
‘என்ன நடந்தடி உனக்கு.. ஏன் இவ்வளவு பதற்றப்படுறாய்’ என்றாள் அம்னா.
இப்போதுதான் சியாமா ஓரளவு நிதானத்திற்கு வந்தாள். அம்னாவின் தண்ணீர் போத்தலை வாங்கி ஒரு மிடறி குடித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.
‘அடியே, Facebook பார்கல்லியாடி நீ’ என்று கேட்டாள்.
இல்லையென்று அம்னா தலையாட்டினாள்.
சியாமாவுக்கு தான் சொல்ல வருகின்ற விசயத்தை எப்படி போட்டு உடைப்பது என்று தெரியவில்லை. ஆனால், சொல்லாமல் இருக்கவும் முடியாது.
‘நீ இன்றைக்கு கடைக்குப் போக வேணாம். அல்லாஹ்வுக்காக திரும்பி வீட்ட போடி.’ என்று அரற்றினாள்.
அம்னாவுக்கு பொறுமை எல்லை கடந்துவிட்டது. ‘இப்படி அனத்தாம என்னதான் நடந்த என்று சொல்லித் தொலையே..’ என்று சீறினாள்.
சியாமாவுக்கு இப்போது கொஞ்சம் பயம் வந்துவிட்டது. இதற்கு மேல் விழுங்க முடியாது என்று முடிவெடுத்தவள் தான் இத்தனை தூரம் பத்திரமாய் அள்ளிக் கொண்டுவந்த வார்த்தைகளைக் கொட்டினாள்.
‘உன்னைப் பற்றி தப்புத் தப்பா Facebookல போட்டிருக்குடி. நீ புருஷன பிரிந்துட்டு ஆட்டம் ஆடித் திரிதாயாம். எங்கெங்கோ சுத்துறாயாம். பள்ளிவாசல் நிர்வாகம் என்ன செய்துட்டு இருக்கு…. என்று ஆரம்பித்து என்னென்னமோ எல்லாம் எழுதியிருக்காங்கடி’ என்றாள்.
அம்னாவுக்கு அதிர்ச்சிதான். ஆனால், ஆச்சரியமில்லை. அவள் இப்படியெல்லாம் நடக்கும் என ஏலவே எதிர்பார்த்ததுதான். ஒரு பெண் சாதிக்கப் பார்க்கின்றாள் என்றால் இந்தச் சமூகத்தில் வியாதிபிடித்த சிலர் எடுக்கும் முதலாவது ஆயுதம் வெற்றுத் தத்துவங்களையும் போலிச் சாத்திரங்களையும் சொல்லி அவளை முடக்கிப்போட முனைவது, அதற்கும் அவளது பீனிக்ஸ் சிறகுகள் கட்டுப்படவில்லை என்றால் அடுத்து அவளைப் பற்றியும், அவளது ஒழுக்கம் பற்றியும் அவதூறுகளை அள்ளி இறைப்பது..
வழமையாக நடக்கும் சங்கதிதான்.
நடுக்கத்தோடு சியாமா தன் கைகளில் வைத்திருந்த தொலைபேசியை வாங்கி அம்னா பார்த்தாள். இரண்டு நிமிடங்கள்தான். மெலிதாய் இருளப் பார்த்த அவளது முகம் இப்போது முற்றாக தெளிந்துவிட்டது. அது யாரின் வேலை என்று புரிந்து விட்டது. அவளது முன்னால் கணவனின் ஐடிதான் அது. பெயரை மாத்தியிருந்தாலும் முகப்புப்படங்களை மாற்றியிருந்தாலும் யார் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமில்லையே.. பொதுவாக சில சைக்கோக்கள் இருப்பார்கள். தங்களிடமிருந்து யார் பிரிந்து சென்றாலும், விலகிச் சென்றாலும் அவர்கள் நன்றாக இருக்கவே கூடாது என வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள். அதற்கு எந்த அளவு கீழ்த்தர மட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்வார்கள். அதில் அவனும் இணைந்துவிட்டான் போல என பெருமூச்சொன்று விட்டவளாக நடக்க ஆரம்பித்தாள்.
சியாமாவுக்கு அதிர்ச்சி நீங்கவில்லை.
‘நான் உன்னைப் பற்றி யாரோ தப்புத் தப்பா எழுதியிருக்காங்க என்று புலம்புறன். நீ ஏதா யாருக்கோ நடந்தது போல கணக்கெடுக்காம போறாய்’ என அதிர்ந்தாள்.
அம்னா திரும்பினாள். சியாமாவின் கைகளை இறுகப்பிடித்தாள். அவளின் கண்களை உற்றுப் பார்த்தவாறே சொன்னாள்.
‘சியாமா, உனக்கு ஒரு விசயம் மட்டும் சொல்றன். பெண்ணாக பிறந்துவிட்டாலே, அதுவும் ஏதாவது சாதிக்கப் பார்த்தாலே இப்படிப்பட்ட அவறுதூறுகளை சந்திக்க ரெடியாகத்தான் இருக்கனும். மாட்டுச் சாணில கால் வைத்தால் அங்கேயே உட்கார்ந்து விம்மிக் கொண்டிருக்க இயலாது. எல்லாரிடமும் போய் நான் மாட்டுச் சாணில கால் வைத்துட்டன் என புலம்பித் தவிக்கவும் இயலாது. காலைக் கழுவிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.
ஒரு காலத்துல பெண்களை பற்றி வீட்டு விறாந்தை முதல் டீக்கடை வரை அவதூறு சொன்னாங்க. இப்ப இது நவீன காலம் இல்லையா.. Facebook, WhatsApp போன்றவற்றுல பளாய் கழுவுறாங்க. எது எப்படியோ மறுமையில எங்கட தீமையெல்லாம் வாங்கிட்டு அவங்கட நன்மைகளை நமக்குத் தாரத்திற்கு இப்படி பாடுபடுறாங்க. இதையெல்லாம் கவனித்து, ஒவ்வொரு முறையும் எனக்கு ஒப்பாரி வைக்க ஏலாது’ என்று சொல்லிவிட்டு குடையை விரித்தாள்.
தான் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவள் செல்வதையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சியாமா. அவளால் நடப்பவற்றை அவ்வளவு சீக்கிரமாக ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் அம்னாவின் மன உறுதியைக் கண்டு ஆச்சரியப்படாமலும் இருக்கமுடியவில்லை.
காலம் இந்த மனிதர்களை, காயங்கள் இந்த மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றது.
அம்னா இப்படி இருக்கவில்லை. யாராவது தன்னைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டாளே நாட்கணக்கில் சாப்பிடாமல் ஒப்பாரிவைப்பாள். இரவு முழுக்க தூங்காமல் அழுது தீர்ப்பாள்.
ஆனால், இப்போது..
சியாமாவுக்கு ஒன்று மட்டும் தெரிந்தது.
பாடசாலைகளோ பல்கலைக்கழகங்களோ கற்றுத் தராத பாடத்தை சில பொழுதுகளில் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பாடங்கள் கற்றுத்தரும். சிறு பட்டாம்பூச்சியாய்.. மனதில் எவ்வித துயரங்களும் இன்றி உலா வந்துகொண்டிருந்த அம்னாவை கணவன் என்ற பெயரில் வந்தவனால் கிடைத்த வலிகளும் வாப்பாவின் திடீர் மரணம் தந்த அதிர்ச்சியும் கடன்காரர்களின் தொல்லையும் மொத்தமாக மாறிவிட்டிருந்தன.
இப்போது அவள் கழுகாய் மாறிவிட்டிருந்தாள்.
(தொடரும்…)




Leave a Reply