அத்தியாயம் 01
இன்னும் நிலா தூங்கவில்லை.
அம்னாவும் தூங்கவில்iலை.
அந்தி நேர அடிவானில் ஒட்டப்பட்டிருந்த ஒற்றை நட்சத்திரம் சிநேகமாகச் சிரித்தது. தொலைதூர அடர்ந்த காடுகளில் இருந்து மேலெழும்பிய மின்மினிகள் புதர்க் காடுகளுக்குள் புகுந்து எதையோ வெகு சீரியஸாக தேடிக் கொண்டிருந்தன. மெல்லிய தென்றலின் மெதுவான வருடல் மேனிக்கு இதம் தந்தது. பக்கத்துக் கட்டிடம்தான் பாண் பேக்கரி. அங்கிருந்து அலை பாய்ந்து வரும் கருகலற்ற முறுவல் வாசம் அம்னாவின் நாசிக்குள் நுழைந்து உயிருக்குள் ஊடுறுவி அவளது சுவை நரம்புகளை கிச்சுக்கிச்சு மூட்ட முனைந்து கொண்டிருந்தது.
இத்தனை நேரமாக நிலாவில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்த பாட்டிக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது போல. எஞ்சிய சில வடைகளை தனது பேரனுக்கு கொண்டு செல்வதற்காக சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டிருந்தாள்.
ஆழ்மனதால் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அம்னா.
ஏதேதோ எண்ணங்கள் அவளது மனதில் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. இந்தப் பொல்லா மனது அப்படித்தான். எதை மறந்து தொலைக்க வேண்டும் என யாசிக்கின்றோமோ.. அவற்றையே நினைவில் நிறுத்தி கண்ணாம்பூச்சி விளையாடி கண்ணீர்த் துளிகளால் கருவிழிகளை கருக வைப்பதுதான் அதன் அன்றாட வேலை.
விடிந்தால் அவளுக்கு கல்யாணம்
அவளால் முழுமையாக சந்தோசப்பட முடியவில்லை. மனதுக்கு என்னவோ போல இருந்தது. உயிர் ஊற்றெடுக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ சோகமாக புல்லாங்குழல் வாசிப்பது போன்று நொந்தது.
அன்பிருந்தால் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று சாச்சி நினைத்துவிட்டார் போலும். உள்ளே நுழைந்து அம்னாவின் நாடியைத் தூக்கி அவளின் நெற்றியில் ஈரம் படாமல் முத்தமிட்டார். ‘என் செல்ல மகளின் முகம் எவ்வளவு பசுந்தாக இருக்குது. ஆயிரம் பௌர்ணமி போன்று’ என்று அதீத ஆனந்தத்தோடு சொல்லிக் கொண்டார். அம்னாவை கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது அவரது ஆன்மா அடைந்த அளவற்ற ஆனந்தம் அவரின் இரு விழிகளிலும் பல வழிகளில் வழிந்தது. அதற்கிடையில் அம்னாவின் உயிர்த்தோழி சியாமாவும் வந்துவிட்டாள். ‘என்னடி.. யாருக்கோ கல்யாணம் போல ஓரமாக உட்காந்திருக்கிறாய்.. அவசரமா சாப்பிட்டு விட்டு வா.. மெஹென்தி போடலாம்’ என்று தன் தோழியை செல்லமாய் திட்டி விட்டு காணாமல் போய்விட்டாள். ஒரு இடத்தில் நிற்காமல் தனது தோழியின் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் மற்ற தோழிகள் குழுமியிருந்தார்கள். தமக்கு மூன்றாம் வகுப்பு படித்துத் தந்த கோமதி டீச்சரைப் பற்றி நேத்ரா எதையோ சொல்ல ஒட்டுமொத்தமாய் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிரிப்பொலியின் ஆடம்பரத்தால் ஜன்னல் கண்ணாடிகள் கூட அதிர்ந்து கொண்டிருந்தன.
‘எப்போது இரவுச் சாப்பாடு முடியும்.. எனக்கு எப்போது இரண்டு எலும்புத் துண்டு கி;டைக்கும்?’ என்று பக்கத்து வீட்டு பழுப்பு நிற நாய் கன்னத்தில் கால் வைத்து கடும் யோசனையில் ஆழ்ந்திருந்தது. அவசரமாக ஏதாவது கிடைத்தால் அடுத்த தெருவின் எல்லையில் குவிந்திருக்கும் குப்பைகளை கொஞ்சம் கிழறிப் பார்க்கலாம் என அது திட்டமிட்டிருந்தது.
முன் விறாந்தையில் கலகலப்பு கேட்டது.
பக்கத்து ஊரில் இருந்து சின்ன மாமா வந்துவிட்டார் போல.. உம்மா வாய்விட்டுச் சிரிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. தனது மகள் நாளை கல்யாண மேடையில் கம்பீரமாக நிற்கப் போகின்றாள் என்ற ஆனந்தத்தை விட அவருக்கு வேறு என்னதான் வேண்டும். எத்தனை நாள் நள்ளிரவு நேரங்களில் விம்மி விம்மி அழுது ஆண்டவனிடம் கேட்டிருப்பாள் அந்த வரத்தை.. இனி கொஞ்ச நாட்களுக்கு ஆளை கையில் பிடிக்க முடியாது. குட்டிச் சிறுமி போல துள்ளிக் குதித்து கலகலத்துக் கொண்டிருந்தார்.
அம்னா சற்றுத் தொலைவில் இருந்;த தொலைபேசியை எட்டி எடுத்தாள். இத்தனை நேரமாய் அது சினுங்கிக் கொண்டிருந்தது. வட்சப் முழுக்க அவளுக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்து கொண்டிருந்தன. ஏகப்பட்ட குரல் பதிவுகள் வந்து நிறைந்து கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றையும் தனித்தனியாக வாசித்து பதில் தர இப்போது அவகாசம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் சாய்ந்து கொண்;டாள்.
அதிகமாகவே அசதியாக இருந்தது.
இது அம்னாவின் முதலாவது திருணம் அல்ல..
(தொடரும்)




Leave a Reply