ஜப்பானில் பிரபலமான மல்யுத்த வீரன் ஒருவன் இருந்தான். அதிகமான போட்டிகளில் அவன் வென்று தனது எதிரிகளை வீழ்த்தியதால் அவனுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. ஆகவே, காணும் அனைவரிடமும் வம்புக்கு வலியச் சென்று பிரச்சினை செய்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் பாதையில் தன்பாட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவனைப் பிடித்து வம்பிழுத்தான். அந்த அப்பாவியும் விலகிப்போக எவ்வளவோ முயன்றும் இந்த மல்யுத்த வீரன் விடவில்லை. இறுதியாக, சிக்கல் முற்றிவிட்டது. இருவரும் சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் பொதுமக்களுக்கு மத்தியில் சன்டை செய்வது என்று முடிவாயிற்று.
ஊர் மக்களும் இளைஞனும் சேர்ந்து இந்த திமிர் பிடித்த மல்யுத்த வீரனின் அகம்பாவத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டார்கள்.
போட்டிக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டு வந்தன.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மல்யுத்த வீரனை கதவு தட்டும் சத்தம் எழுப்பியது. எழுந்து பார்க்க நான்கைந்து கிராமத்தவர்கள் வந்திருந்தார்கள். ‘உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டோம ;. இப்போது உடல் நலம் எவ்வாறு?’ என்று பரிதாபமாகக் கேட்டார்கள்.
வீரனுக்கு குழப்பமாக இருந்தது. அவர்களை நிமிர்ந்து பார்த்தான். ‘யார் எனக்கு உடல் நலமில்லை என்று சொன்னது?’ என்று கேட்டான்.
‘ஊர் முழுக்க அப்படித்தானே பேசிக்கொள்கின்றார்கள். நீ வேறு உடல் மெலிந்து இளைத்து விட்டாயே!’ என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள்.
அன்று பகல் உணவுக்காக கடைக்குச் சென்றான் அவன். வழமையான உணவை விட அரைவாசி உணவைக் கொண்டு வந்து வைத்தார் கடைக்காரர். ‘இந்த உணவு எனக்குப் போதுமா?’ என்று சீறினான் அவன்.
‘இப்போதெல்லாம் உன்னால் ஒழுங்காக சாப்பிட முடிவதில்லையே! நேற்றுக் கூட மிகவும் சிரமப்பட்டுத்தானே சாப்பிட்டாய்!’ என்றார் முதலாளி.
வீரனுக்கு எதுவுமே புரியவில்லை. சிந்தித்தவாறே வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்தவன் எதிரே காணப்பட்ட கல்லைக் கவனிக்கவில்லை. அதில் தடுக்கி விழப் பார்த்தான். அவ்வளவுதான். நான்கைந்து பேர் வந்து அவனை தாங்கிப் பிடித்தார்கள். ‘வீரனுக்கு மயக்கம் வந்து விட்டது’ என்று அலறினார் ஒருவர். ‘சில நாட்களாக அவன் தள்ளாடித் தள்ளாடித்தான் நடக்கின்றான்’ என்றார் இன்னொருவர்.
வீரனுக்கு இப்போது உண்மையிலேயே தலை சுற்றியது. அப்படியே மயங்கிவிட்டான். ஆனால், பாவம் அவன். இவை அனைத்துமே அந்த புத்திசாலி இளைஞனினதும் கிராமத்தவர்களினதும் கூட்டு ஏற்பாடு என்று அவனுக்குத் தெரியவில்லை.
போட்டிக்குரிய நாள் வந்தது. வீரன் உண்மையிலேயே நோயாளியாகிவிட்டான். படுக்கையில் இருந்து அவனால் எழக் கூட முடியவில்லை.
இக்கதையானது எம்மைச் சூழ உள்ள மனிதர்கள் எவ்வாறு எமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றார்கள் என்று கற்றுத் தருகின்றது. எம்மைச் சூழ இருக்கும் நபர்கள்தான் எமது மனநிலையை நிர்வகிப்பதிலும் எமது சிந்தனைத் தளங்களை மேம்படுத்துவதா அல்லது சீர்குலைப்பதா என்பதைத் தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
பொதுவாக எம்மோடு உரையாடும் மனிதர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.
1. கண்ணாடி மனிதர்கள்
நாம் எத்தகைய மனநிலையோடு இவர்களோடு உரையாடுகின்றோமோ அதே மனநிலையோடுதான் இவர்கள் எம்மோடு உரையாடலைத் தொடர்வார்கள்.
2. குப்பை லொறி மனிதர்கள்
நாம் எவ்வளவு அற்புதமான, அதிசிறந்த, வாசனையான விடயங்களை பேச முனைந்தாலும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அடுத்தவர்களின் குறைகளைப் பற்றியும் இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களையும் புலம்புவார்கள்.
3. பூக்கடைக்காரர்கள்
இவர்கள் அற்புதமானவர்கள். சற்று நேரம் இவர்களோடு பேசினாலே எமக்கும் அவர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
ஆக, இவர்களில் எமது மனநிலையை மாசுபடுத்தி, எமது இலக்கை நோக்கிய பயணத்தில் இருந்து எம்மைத் தூக்கியெறியும் குப்பைக் காரர்கள் பற்றித்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாலையிலேயே அங்கும் இங்கும் கொட்டிக்கிடக்கும் மறைச்சிந்தனைகைளை அள்ளிக் கொண்டு வரும் அவர்கள்.
மனிதர்களை கண்டெடுப்போம்…




Leave a Reply