திருமணம் முடிந்துவிட்டது.
இரவாகிவிட்டது.
தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக் கிடைக்கவில்லை. ஆகவே இப்போது என்னவெல்லாம் பேசலாம் என்பதைப் பற்றித்தான் சீரியஸாக சிந்தித்தவாரே சென்று கொண்டிருந்தாள்.
தனது கனவுகள் பற்றி நிறைய சொல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. தான் விரும்பும் வேலை பற்றியும் அதற்கு அவன் என்னவெல்லாம் சப்போர்ட் பண்ண வேண்டும் என விருப்பமாக இருந்தது. இப்போதும் வாப்பாக்கும் தனக்கும் தொப்புள் கொடியை வெட்டவில்லை என கணவனிடம் சொல்ல வேண்டும் என தேவையாக இருந்தது.
தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பயாஸ் மாமாவின் கடையடியில் நின்று கொண்டு தான் பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு நாள் காலையிலும் கண் சிமிட்டுவானே.. அவனைப் பற்றிச் சொல்லும் போது தனது கணவனின் முகத்தில் எரியும் பொறாமைத் தீயின் சூட்டை கொஞ்சம் தொட்டுப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது.
அம்னா மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
பாவம் அவள்.
தலையில் இடி விழுந்தது.
தனது விதி இப்படியா அலங்கோலமாக அலற வேண்டும் என இருந்தது அவளுக்கு
எத்தனை ஆசையுடன் தனது அன்புக் கணவனைப் பார்க்க வந்திருந்தாள். ஆனால் அவளின் ஆசைக் கணவனோ அங்கே. போதை தலைக்கேறி மயங்கிக் கிடந்தான். அவனருகே… உலகை சீரழிக்கும் போதைப் பொருட்கள் என அவள் பல்கலைக் கழகத்தில் பார்த்துப் பயந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
அவளது ஆழ்மனதில் அத்தனை நேரமாய்ப் பூத்திருந்த அத்தனை வானவிற்களும் அந்த நொடியில் கருகிவிட்டன. அவனது ஆன்மாவிற்கும் பூத்திருந்த அனைத்து பட்டாம்பூச்சிகளும் செத்து விட்டன.
அப்படியே உடைந்து நொருங்கிப் போய் உட்கார்ந்து விட்டாள். கண்ணீர் மட்டும் கன்னங்களில் புரண்டோடத் தொடங்கி விட்டது. ஆனால் அவளது மனம் பற்றியெரிவதை கொஞ்சம் கூட உணர முடியாத நிலையில் இருந்த அவளது கணவன் ஏதேதோ சொல்லி உளறிக் கொண்டிருந்தான். என்ன செய்வது என்று புரியாமல் அறையின் மூலையில் அமர்ந்து விடிய விடிய அழுது கொண்டிருந்தாள் அவள்.
அடுத்த நாள் அதிகாலை.
சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்கார்ந்தான் அஸ்ஜத்.
கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.
வாயை அகலத் திறந்து கொட்டாவி விட்டான். ‘ஓஹ் அம்னா! நீங்க நேரத்தோட எழும்பிட்டீங்களா!’ என்றவன் எதுவுமே நடவாதது போல குளிக்கச் சென்றுவிட்டான்.
பாவம் அம்னா! என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை. மெதுவாக தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்தாள். திடீரென ஏதோ எண்ணம் மனதில் உதிக்க பென்னம் பெரிய தேக்குமர அலுமாரியைத் திறந்து அவனின் ஆடைகளைக் கிழறத் தொடங்கினாள். கிண்டக் கிண்ட பொட்டலங்கள் வந்து கொண்டே இருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு சக்தி இருக்கவில்லை. அப்படியே சோர்ந்து உட்கார்ந்தவள் திக்பிரமை பிடித்துக் கிடந்தாள்.
அஸ்ஜத் குளித்து விட்டு வெளியே வந்தான். கட்டில் கிடந்த கோலத்தையும் அதில் அலங்கோலமாகக் கிடந்த ஆடைகளையும் அவற்றுக்கு மேல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இளித்துக் கொண்டிருந்த பொட்டலங்களையும் பார்த்தபோதே என்ன நடந்திருக்கும் என அவனுக்குப் புரிந்து வி;ட்டது.
மெதுவாக அம்னாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான்.
‘அம்னா, உங்கட மனநிலை எனக்குப் பரியுது. ஆனால், நீங்க உடைஞ்சு உட்காருத அளவுக்கு இது அவ்வளவு பெரிய விசயம் இல்ல. சின்ன வயதுல பழகினது. வுpட முடியல்ல. நீங்க இத கண்டுக்க வானாம்’ என்றான் ரொம்ப சர்வ சாதாரணமாக…
ஆனால், அவளால் முடியவில்லை. அப்படி கண்டு கொள்ள முடியாமல் போகும் அளவு இது சர்வ சாதாரண விஷயம் இல்லையே! அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சீறி எழுந்தாள்.
‘எப்படி என்னால் எதையும் கண்டு கொள்ளாம இருக்க முடியும். இந்த நஜீசல்லாம் பார்த்துட்டு எப்படி என்னால சும்மா இருக்க முடியும்!’ என பற்றியெரிய ஆரம்பித்தாள்.
அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
‘என்ன அம்னா உங்களை அமைதியான புள்ள என நினைத்தேன்’ என இழுத்தான்.
அவள் விடவில்லை.
‘அமைதியான புள்ளை என்றால்… அமைதியான புள்ளை என்றால் என்ன அர்த்தம்? நீங்க என்ன செய்தாலும் மூடிட்டு இருக்கனுமா! நீங்க என்ன ஹராமான வேலை செய்தாலும் பார்த்துட்டு கிடக்கனுமா!? ஏன்ட வாழ்க்கை இப்படி நாசமாகின நினைத்து எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்!’ என பதறியவள் திடீரென வெறி பிடித்தவள் போல எழுந்து அங்காங்கே சிதறிக் கிடந்த பொட்டலங்களை அள்ளிச் சேகரிக்க ஆரம்பித்தாள்.
இப்படியெல்லாம் நடக்கும் என அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான் போல. அம்னாவைப் பற்றி கேள்விப்பட்ட அளவில் அவள் அமைதியானவள். அடக்கமானவள். அனைத்தையும் சமாளித்துக் கொண்டு அனுசரித்துக் கொண்டு போகக் கூடியவள் என்றுதான் எல்லாரும் சொல்லியிருந்தார்கள். ஆனால், அவளுக்குள் இப்படியொரு எரிமலை இருக்கும் என அவன் அனுமானித்திருக்கவில்லை. குளம் அமைதியாக இருக்கின்றது என்று முதலைகள் இல்லை என்று அர்த்தம் இல்லையே
அஸ்ஜத் எழுந்தான்.
தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அவளின் கன்னத்தில் ‘பளார்’ என ஓர் அறை விட்டான். அவளும் இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியே அவள் நி;லைகுலைந்து போய் உட்கார… அவளது கைகளில் கிடந்த பொட்டலங்களை பிடுங்கிக் கொண்டு வெளியே போய்விட்டான்.
அந்தப் பனிக்கட்டி கரையத் தொடங்கியது. இத்தனை நாட்களாக அந்த செல்ல வாப்பா தனது செல்ல மகள் ஒரு துளிக் கண்ணீரும் சிந்திவிடக் கூடாது என தனது உயிரை உருக்கி பாடுபட்டாரோ அத்தனை கண்ணீர்த் துளிகளும் இப்போது ஒரே நேரத்தில் கரைந்து கொண்டிருந்தன.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேனே.. எம்மால் எதையெல்லாம் தாங்க முடியாது என நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அவற்றையல்லாம் தாங்க முடியும் என நம்மை நம்ப வைப்பதுதான் இந்த வாழ்க்கையின் ஒற்றை இலக்கு போல…
இரண்டு நாட்கள் கடந்து விட்டன.
ஒவ்வொரு நொடியும் அம்னாவுக்கு நரகமாக கழிந்து கொண்டிருந்தது. அஸ்ஜத் எப்போது மனிதாக இருக்கின்றான், எப்போது மிருகமாக மாறியிருக்கின்றான் என அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் தேனும் பாலும் கலந்து தெவிட்ட தெவிட்ட பேசினான். சில பொழுதுகளில் கதவிடுக்கினுள் கால் பெரு விரலை விட்ட பைத்தியகாரன் போல முரட்டுத்தனமாக நடந்து கொண்டான்.
இரண்டாவது நாள் காரணமே இல்லாமல் அம்னாவுக்கு இன்னொரு அறை விழுந்தது. உதட்டோரம் இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. வாப்பா ஆசையாக வாங்கித் தந்த வெள்ளை ஷல்வாரில் ஒரு துளி சிவப்பு இரத்தம் விழுந்தது.
நடந்த எல்லாவற்றையும் சொல்லி மாமியிடம் – அஸ்ஜத்தின் உம்மாவிடம் ஒப்பாரி வைத்து அழுதாள் அம்னா. ஆனால் மாமியும் பெரிதாக அலட்டிக் கொண்டாகத் தெரியவில்லை.
‘என்ன செய்ய மகள்! அவன் உண்மையிலேயே தங்கமான புள்ள. ஆனால், கெட்ட சகவாசம். இப்ப அவனால விட முடியல்ல. ஆனால், தயவு செஞ்சு இதை ஊரில் யார்டயும் சொல்லிடாத’ என கெஞ்சினார் அவர்.
‘அப்படியென்றால் இதையெல்லாம் தெரிந்து கொண்டா இந்த கல்யாணத்தை செய்தீங்க’ என அதிர்ந்து போனாள் அவள்.
‘என்ன செய்ற மகள். அவனைத் திருத்த வேணுமே, ஒரு கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிடும் என்று சொன்னாங்க. அதற்குத்தான் உன்னை முடித்துக் கொடுத்தோம். நீதான் அவனைத் திருத்த வேண்டும்’ என அந்த மாமியிடமிருந்து பதில் வந்தது.
அம்னா அதற்கு மேல் பேசவில்லை. தெரிந்த தன்னை இந்த நரகப் படுகுழியில் எட்டி உதைந்தவர்களிடம் என்ன வாதாட இருக்கின்றது! தங்கள் மகனை திருத்த ஊராருக்கு பெருமையடிக்க ஒரு ஏழைக் குடும்பத்தை பலியிட எப்படி இவர்களுக்கு மனது வந்தது என்று அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றை வாப்பா எப்படி தாங்கிக் கொள்ளப் போகின்றார் என நினைக்கும்போதுதான்…. அவளது இதயமே வெடித்துச் சிதறியது.




Leave a Reply