ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹமீத் தபஷி – தமிழில் – ஹதிகா கியானி
ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான ஆதரவோடு, ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட்டு விருப்பமும் பொருளாதார வசதியும் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது இரவு பகலாக மூன்று மாதங்களுக்கு குண்டு போட்டு பல்லாயிரக்கணக்கானோரை கொன்று, இன்னும் ஏராளமானவர்களை காயப்படுத்தி, மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக்கி, இன்று காஸா இருக்கும் நிலைமையை போன்று அந்நகரத்தை மனிதர்கள் வாழ முடியாத இடிபாடுகளின் ஒரு குவியலாக்கி விடுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
ஈரானும் அதன் நேச நாடுகளும் வேண்டுமென்றே டெல் அவிவ்வின் மக்கள் தொகை நிறைந்த பகுதிகள், வைத்தியசாலைகள், ஜெப ஆலயங்கள், பாடசாலைகள், பல்கலைகழகங்கள், நூலகங்கள் அல்லது மக்கள் தொகை நிறைந்த ஏனைய ஏதோவொரு பகுதியை பாரிய பொதுமக்களின் உயிரிழப்பை இலக்குவைத்து தாக்குவதை சில நொடிகளுக்கு கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாஹு மற்றும் அவரது போர் அமைச்சரவையை தேடுவதாக உலகிற்கு அது காரணமொன்றை முன்வைக்கக்கூடும்.
இந்த கற்பனை காட்சியின் தாக்குதல் நடைபெற்ற 24 மணித்தியாலங்களுக்குள் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜெர்மானி போன்ற நாடுகள் என்ன செய்யும் என்பதை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்போது யதார்த்திற்கு திரும்பி, ஒக்டோபர் 7ம் திகதியிலிருந்து ( அதற்கு முன்பு பல தசாப்தங்களாகவும் கூட ) டெல் அவிவ்வானது பாலஸ்தீன மக்களுக்கு செய்தவற்றை அதன் மேற்கத்திய நேச நாடுகள் பார்த்துக்கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாம் அதற்கு தேவையான இராணுவ கருவிகளையும், வெடி குண்டுகளையும், தோட்டாக்களையும் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பையும் வழங்கியதை சிந்தித்துப்பாருங்கள். இவற்றோடு சேர்த்து அமெரிக்க ஊடகங்களானது பாலஸ்தீனர்கள் மீது நிகழ்த்தப்படும் கொலைத்தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைக்கும் சிந்தனைரீதியான நியாயப்பாடுகளையும் வழங்கிக்கொண்டிருந்தது.
மேலே குறிப்பிடப்பட்ட கற்பனை காட்சியானது தற்போது இருக்கும் உலக ஒழுங்கில் ஒரு நாளேனும் சகித்துக்கொள்ள படமாட்டாது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவின் இராணுவ குண்டர்த்தனம் முழுமையாக இஸ்ரேலின் பின் இருக்கும் வரை பாலஸ்தீனர்களை போன்ற பாவப்பட்ட நாம் என்றுமே கணக்கில் கொள்ளப்படமாட்டோம். இது அரசியல் யதார்த்தம் சார்ந்த ஒரு விடயம் மாத்திரமல்லாமல் தன்னை “மேற்கு” என்று அடையாளப்படுத்திக்கொள்ளுபவற்றின் அறம் சார்ந்த கற்பனை மற்றும் அதனது தத்துவார்த்த பிரபஞ்சத்துடனும் சம்பந்தப்பட்ட ஒரு விடயமுமாகும்.
ஐரோப்பாவின் அறம் சார்ந்த கற்பனை வட்டத்திற்கு வெளியே இருக்கும் எம்மை போன்றவர்கள் அவர்களின் தத்துவார்த்த உலகினுள் அடங்காதவர்களாகவே இருக்கிறோம். அரேபியர்கள், ஈரானியர்கள் மற்றும் முஸ்லிம்கள்; அல்லது ஆசியா, ஆஃப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களாகிய எமக்கு ஐரோப்பிய தத்துவவாதிகளின் பார்வையில் எந்தவொரு இருப்பியல்பு சார் யதார்த்தமும் (ontological reality) கிடையாது. மாறாக ஆக்கிரமித்து அடக்கப்பட வேண்டிய ஒரு மீவியற்பியல் ஆபத்தாகவே (metaphysical menace) அடையாளப்படுத்தப்படுகிறோம்.
இமானுவேல் கான்ட் மற்றும் ஃபிரெய்ட்ரிக் ஹெகலிடம் இருந்து தொடங்கி தற்போது எமானுவேல் லெவினாஸ் மற்றும் சிலோவாய் ஜிஸேக் என தொடர்ந்து கொண்டிருக்கும் இவர்களை பொருத்தவரை நாம் அனைவரும் கீழைத்தேயவாதிகளால் ஆராய்ந்து விளக்கப்பட வேண்டிய ஒரு வினோதம், ஒரு விடயம் மற்றும் அறிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு பொருளாகும். இதனடிப்படையில் இஸ்ரேலால், அல்லது அமெரிக்காவாலும் அதனது ஐரோப்பிய நேச நாடுகளாலும் எம்மை போன்றோர் பல்லாயிரக்கணக்கில் கொலை செய்யப்படுவதானது ஐரோப்பிய தத்துவியலாளர்களது மனதில் எவ்வித ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஐரோப்பிய பழங்குடி (tribal) பார்வையாளர்கள்
உங்களுக்கு அதை பற்றி சந்தேகம் இருப்பின் ஐரோப்பாவின் முன்னனி தத்துவவியலாளரான யூகன் ஹபர்மாஸ்ஸும் அவரது சகபணியாளர்கள் சிலரும் இணைந்து பாலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் செயலை ஆதரித்து தமது கொச்சைத்தனத்தையும் கொடூரத்தையும் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளதை சற்று பாருங்கள். 94 வயதை எய்தியிருக்கும் ஹபர்மாஸ் எப்படிப்பட்ட ஒரு மனிதர் என்பதல்ல எமது கேள்வி. அவரை ஒரு சமூக விஞ்ஞானியாக, தத்துவவியலாளராக மற்றும் ஒரு விமர்சன சிந்தனையாளராக நாம் அவரை பற்றி எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. இதற்கு முன்பு அவரது சிந்தனை மீது நாம் ஆர்வம் செலுத்தியிருந்தால் இனிமேலும் அவர் என்ன சிந்திக்கிறார் என்பதன் மீது நாம் கரிசனை செலுத்த வேண்டுமா?
நாசிசத்துடனான தீங்கிழைக்கக்கூடிய தொடர்பை வைத்துக்கொண்டிருந்த மற்றுமொரு முக்கியமான ஜெர்மானிய தத்துவவியலாளாரான மார்டின் ஹெய்டெக்கரை பற்றி உலகம் இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறது. என்னை பொருத்தவரை நாம் இப்போது அம்மாதிரியான கேள்விகளை ஹபர்மாஸின் கொடுமையான சியோனிசத்தை நோக்கியும் அவரது மொத்த தத்துவார்த்த திட்டத்தை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதன் அடிப்படையில் தோன்றும் குறிப்பிடத்தக்க விளைவுகளை நோக்கியும் கேற்க வேண்டும்.
தனது அறம் சார்ந்த உலகினுள் பாலஸ்தீனர்களுக்கு ஒரு சிறிதளவேனும் இடம் இல்லையெனில் ஹபர்மாஸின் மொத்தமான தத்துவார்த்த செயற்திட்டத்தினை அவரது உடனடி ஐரோப்பிய இனத்தின் அவைக்கு அப்பால் இருக்கும் எம்மை போன்ற மனித இனம் எவ்வாறு அதனை உள்வாங்கிக்கொள்வது?
புகழ்பெற்ற ஈரானிய சமூகவியளாலர் ஆஸெஃப் பயாத், ஹபர்மாஸை நோக்கிய தனது திறந்த கடிதத்தில் காஸாவின் நிலைமையை பொருத்தவரையில் “அவர் (ஹபர்மாஸ்) தனது சொந்த கருத்துக்களுடனே முரண்படுகிறார்” என்று கூறியிருந்தார். ஆனால் நான் மதிப்புடன் இக்கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். பாலஸ்தீன வாழ்வுகளின் மீதான ஹபர்மாஸின் அலட்சியமானது அவரது சியோனிஸத்தினுடன் முழுமையாக பொருந்திப்போகிறது என்பதே எனது நம்பிக்கை.




Leave a Reply