மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?
கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு நண்பன் போன்று பழகிய மேலதிகாரியை நான் இழந்து விட்டேன். நெஞ்சு வலிக்கின்றது என்று சாய்ந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு எடுத்துக் கொண்டு ஓடியிருக்கின்றார்கள். ஆனால், மருத்துவர்களால் என்ன செய்ய முடியும். வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கையை விரித்திருக்கின்றார்கள்.
மரணத்திற்கு காரணம் மாரடைப்பு (Heart Attack)
மரண வீடு வழமையை விட சோகத்தில் நனைந்திருந்தது. இறந்தவரின் இளைய மகளுக்கு இரண்டு வயது இருக்கும். விரலைச் சூப்பிக் கொண்டு எங்களைப் பார்த்து மெல்லினமாய், கண்களால் புன்னகைத்தது. நல்லாத்தான் இருந்தார். நல்லாத்தான் பேசினார். இன்று இல்லை என வழமையான கதைகள்.
எல்லாவற்றையும் விட மரண வீட்டுக்கு வந்த அதியமான் டொக்டர் சொன்ன சில விசயங்கள்தான் எனக்கு திகிலை ஏற்படுத்தியது. இப்போது மாதத்திற்கு பத்துப் பதினைந்து இளவயது மரணங்களை அவர் காண்கிறாராம். ஒரு காலத்தில்தான் இளவயது மரணங்கள் ஆச்சரியம். அதிசயம். ஆனால், இன்று அனைத்தும் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதுவும் மாரடைப்பு (Heart Attack) என்பது வெறுமனே காய்ச்சல் தடுமல் போல சர்வ சாதாரணமாக எட்டிப் பார்க்கின்றது. ஒரு உயிரைப் பறித்துக் கொண்டு கொஞ்சம் கூட வெட்கமே இன்றி பறந்துவிடுகின்றது.
- மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?
மாரடைப்பு (Heart Attack) என்பது இதயத்திற்குச் செல்லும் இரத்தம் திடீரென தடைப்படுவதால் ஏற்படும் ஆபத்தான நிலையாகும். இரத்தம் தடைப்படுவதால் தசைகள் சேதமடைகின்றன. பெரும்பாலும் இது மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதனை மருத்துவப் பெயரில் Myocardial Infarction என அழைப்பார்கள்.
2. மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் எவை?
மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகளை அறிந்துகொள்ளும்போது நாம் உயிர்பிழைக்க கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். அதேபோன்று இந்த அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் எம்மைச் சுற்றி இருப்பவர்களையும் எம்மாமல் காப்பாற்றிக் கொள்ள இயலும்.
- மார்பில் கடுமையான வலி அல்லது கடுமையான அழுத்தம் ஏற்படல்.
- இடது கை, தோள், கழுத்து அல்லது தாடைப் பகுதியில் வலி ஏற்படல்.
- மூச்சுத் தினறல் ஏற்படல்.
- அதிகமாக வியர்க்க ஆரம்பித்தல்.
- மயக்கம் அல்லது வாந்தி ஏற்படல்.
3. மாரடைப்பு (Heart Attack) ஏன் வருகின்றது?
மாரடைப்பு (Heart Attack) ஏன் வருகின்றது என்பதற்கு சில காரணங்களை மருத்துவர்கள் முன் வைக்கின்றார்கள். அதேபோன்று இன்னும் இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த காரணங்களை நாம் அறிந்து கொள்வது எம்மை மாரடைப்பை (Heart Attack) விட்டு பாதுகாக்கின்றது. அதேபோன்று ஆரோக்கியமாக வாழவும் வழி செய்கின்றது. பின்வரும் காரணங்களை பார்க்கும்போது ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது. இந்த காரணங்கள் எமக்கு மாரடைப்பை (Heart Attack) மட்டும் கொண்டு வருவதில்லை. இன்னும் பல நோய்களையும் சேர்த்தே கொண்டு வருகின்றன.
முடியுமானால் இந்த விடயங்களை பிரதி செய்து வீட்டில், அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியக் கூடிய இடத்தில் காட்சிப் படுத்துங்கள்.
- இரத்த நாளங்களில் கொழுப்பு தேங்குதல்
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளங்களில் பின்வரும் விடயங்கள் தங்குவதன் ஊடாக அடைப்பு ஏற்படலாம்.
கொழுப்பு
கொலஸ்ட்ரோல்
குப்பைச் சேர்மானங்கள்
இவை இரத்த நாளங்களில் தங்கி பளாக் உருவாகின்றது. இதனால் இரத்தங்கள் செல்லும் வலி அடைபடுகின்றது. இன்னொரு முறையில் சொல்லப் போனால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது. ஆகவே, எமது உணவில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரோல் போன்றவை பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் சுவைக்காவோ, கவனயீனமாகவோ இது பற்றி அக்கறை காட்டா விட்டால் ஆபத்து நமக்குத்தான்.
எமது உணவுப் பழக்கமே உயிர்கொல்லும் விசமாக மாறிவிடுவது எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம்…!
- அதிக கொலஸ்ட்ரோல்
மனதில் கொஞ்சங் கூட குற்றவுணர்ச்சி இன்றி நாம் மாரடைப்புக்கான (Heart Attack) முதல் குற்றவாளிக் கூண்டில் கொலஸ்ட்ரோலை நிறுத்தலாம். அதிக கொலஸட்ரோல்தான் மாரடைப்புக்கு முதல் குற்றவாளி
- உயர் இரத்த அழுத்தம் Hypertension
உயர் அழுத்தம் என்பது சாதாரண நோய்நிலைதான். ஆனால், இதுவும் மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட காரணமாகும். ஆகவே, உயர் அழுத்தம் உள்ளவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகளை உரிய விதத்தில் பெறுவது சிறந்ததாகும்.
- புகை பிடித்தல்
ஒப்பீட்டளவில் புகை பிடித்தல் இப்போது அருகி வருகின்றது. மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல செய்திதான். ஆனால், ஆழமாக பார்த்தால் மிகவும் கவலையான செய்தி. ஏனென்றால் ஒரு காலத்தில் புகைப்பிடித்தவர்கள் இப்போது அதனைக் கடந்து மிக மோசமான போதைப் பொருட்களில் மூழ்கிவிட்டார்கள்.
ஒரு ஊருக்கு சிகரட் விற்பவன் ஒருவன் வந்தானாம். அவன் மற்றவர்களை விட வித்தியாசமாக விளம்பரம் செய்தானாம். ‘ எனது சிகரட்டைப் பிடிப்பவர்களுக்கு முதுமையே வராது’ என்று விளம்பரம் செய்தானாம். அதைனக் கேட்ட பலருக்கு ஆச்சரியம். அது எப்படி உயிர்கொல்லும் சிகரட் முதுமை வராமல் காக்கும் என சிந்தித்தார்கள். இறுதியாக ஆசிரியர் ஒருவர் அவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
‘அது எப்படி உனது சிகரட்டை குடித்தால் முதுமை வராது?’ என்று
அவன் புன்னகைத்தான். அக்கம் பக்கம் பார்த்தான். ஆசிரியரின் காது அருகே வந்தான். ‘நான் சொன்னது உண்மைதான் ஆசிரியரே…! எனது சிகரட்டை குடித்தால் அவர்கள் சீக்கிரமாக செத்துப் போவர்கள். இளமையிலேயே செத்துப் போனால் எப்படி முதுமையை காண முடியும்?’ என்றான் அவன்.
ஆகவே, புகைப்பிடிக்கும் பழக்கம் வேண்டாம். அதை விட புகைப்பிடிக்கும் நண்பர் வேண்டாம். புகையே வேண்டாம்…
- நீரிழிவு நோய்
சுகர் என்ற நாட்டுமொழியில் அறியப்படும் நீரிழிவு நோயும் மாரடைப்பு (Heart Attack) வர காரணமாக அமைகின்றது. ஏற்கனவே நீரிழிவே ஒரு தொந்தரவான நோய்தான். அதிலும் டயபடிஸ் 02 Type 2 Diabetes வகை நோயால் தாக்கப்பட்டவர்கள் மிக இலகுவாக மாரடைப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
6. உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை
இன்றைய வாழ்வொழுங்கு மாறிவிட்டது. உடற்பயிற்சி என்பது அறவே மறந்து போய்விட்டது. அதிகாலையில் வெளியே எட்டிப் பார்த்தால் நான்கைந்து நரை விழுந்த பாட்டன்மார் இரைக்க இரைக்க ஓடிக் கொண்டிருப்பார்கள். ஜனவரி மாதத்தில் ஜிம் மாஸ்டர் தங்கத்தில் கார் வாங்கும் அளவு ஆட்கள் பதிவு செய்வார்கள். ஆனால், நாளாக நாளாக அதோ கதிதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்று ஒரு சிலர்தான் எஞ்சி நிற்பார்கள்.
உடற்பயிற்சி என்பது பொழுது போக்கல்ல. அது எமது உயிரை காக்கும் அற்புத கேடயம். சோம்பலோ பொடுபோக்கோ ஏதோ ஒரு அரக்கன் எம்மை விட்டு அதனை பிரித்து விடுகின்றான்.
ஒரு நாளைக்கு ஆகக்குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யலாம்.
அல்லது இருபது நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்யலாம்.
அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் சைக்கள் ஓட்டலாம்.
அல்லது முப்பது நிமிடங்கள் நீச்சல் செய்யலாம்.
அல்லது முப்பத்தைந்து நிமிடங்கள் உதைப் பந்து விளையாடலாம். எவ்வளவோ இருக்கின்றன எமது உயிரைக் காப்பாற்ற…
- மன அழுத்தம் (Stress)
இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயமாகும். இன்று உடலுக்கு ஒரு நோய் வரும் போது அனைவரும் பதறுகின்றார்கள். வைத்தியசாலைகளை நோக்கி ஓடுகின்றார்கள். வைத்தியர்களின் காலைப் பிடித்து கெஞ்சுகின்றார்கள். ஆனால், உள்ளத்தில் தோற்றும் உபாதைகளைப் பற்றி ஒருவரும் அலட்டிக் கொள்வதில்லை. ஏன் இந்த முரண்!!
இந்தக் காலத்தில் மன அழுத்தம்(Stress) என்பது அனைவருக்கும் சர்வசாதாரணமாகிவிட்டது. முன்னர் போன்று ஓய்வான வாழ்க்கை இல்லை. தோள் தர கூடிய உறவுகள் இல்லை. வயல் வெளிகளில் ஆடிப்பாடும் குதூகலம் இல்லை. தோள் பற்றி நடனமாட வயல்கள் இல்லை. அனைத்து மக்களும் ஏதோ மந்திரிக்கப்பட்ட மந்திகள் போன்று ஓடிக் கொண்டிருக்கின்றோம். இறுதியாக எஞ்சுவது என்னவோ மன அழுத்தம்தான் (Stress). இந்த மன அழுத்தம்தான் (Stress) இறுதியில் எம்மைக் கொண்டு மாரடைப்பில் (Heart Attack) தள்ளுகின்றது.
உளவியலாளர்கள் இப்போது நிறைந்து விட்டார்கள். கைக்கும் காலும் அகப்பட்ட உளவியல் பாடநெறிகள் சீரழிகின்றன. ஆனாலும், தகுதியான பலர் இருக்கின்றார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு வெளிப்படையாக பேசி எமது மன அழுத்தங்களை குறைத்துக் கொள்ளலாம். எமது வாழ்க்கை முறையை மாற்றலாம். ஓய்வுக்கும் உல்லாசத்திற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம். முக்கியமாக மனம் விட்டு உரையாடலாம். எத்தனை வயது ஆனாலும், வெட்கப்படாமல் கொஞ்சம் காதலிக்கலாம். யார் கோபிக்கப் போகின்றார்கள்…
- உடற்பருமன்
உண்மையான விசயம்தான். அதிக உடற்பருமனும் மாரடைப்புக்கு (Heart Attack) காரணமாக அமைகின்றது. கண்டதை விழுங்கித் தொலைப்பது மாத்திரம் உடற்பருமனுக்கு காரணமாக அமைவதில்லை. தவறான உணவு வழக்கம், பரம்பரையியல் காரணிகள், உடற்பயிற்சி இன்மை போன்று பல காரணிகள் இருக்கின்றன. உடற்பருமனிலும் கவனம் செலுத்துவோம்.
04. மாரடைப்பிலிருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்?
- ஆரோக்கியமான உணவு வழக்கத்தை பின்பற்றுதல் :- ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், மரக்கறிகள், சத்துணவுகள் போன்றவற்றை முக்கியத்துவப் படுத்தல், துரித உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட உணவுகள் போன்றவற்றை முற்றாக தவிர்த்தல்.
- உடற்பயிற்சி :- உடற்பயிற்சியை அன்றாட வழக்கமாக்கிக் கொள்ளல். தினமும் கட்டாயமாக 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல். அல்லது, நடைப் பயிற்சி செய்தல். மைதான விளையாட்டுக்கள், உள் மைதான விளையாட்டுக்கள் போன்றவற்றை அதிகப்படுத்துதல்.
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல் :- மனம் அழுத்தம் மெல்லக் கொள்ளும் விசமாகும். ஆகவே, மனதை மகிழ்விக்க கூடிய விடயங்களை செய்தல், நல்ல நண்பர்களை தேடிக் கொள்ளல். மனம் விட்டு உரையாடுதல்.
- தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளல் :- தேவைப்படும்போது இரத்த அழுத்து பரிசோதனை, சக்கரை அளவு பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ளல்.
மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?
பெரும்பாலும் இது (Heart Attack) காலை நேரத்தில் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. அதற்குக் காரணம் காலை நேரத்தில் இரத்த ஓட்டமும் ஹோர்மோன்களின் செயற்பாடும் அதிகமாக இருப்பதாகும். சில பொழுதுகளில் தூக்கத்தின் போதே சிலர் மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு மரணமடைகின்றனர். 20 வீதமான மாரடைப்பு நிலை (Heart Attack) பெரிதாக அடையாளங்கள் எதையும் காட்டாது என கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக மாரடைப்பு (Heart Attack) வரும் என கூறப்பட்டு வந்தாலும் தற்போது 55 வயதுக்கு உற்பட்ட பெண்களுக்கும் மாரடைப்பு(Heart Attack) வருவதாக கூறப்படுகின்றது. ஆண்களுக்கு மாரடைப்பு (Heart Attack) வருதற்கான சந்தரப்பம் 62 சதவீதம் தொடக்கம் 75 சதவீதம் வரையுள்ளதாகும்.
மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?
சர்வதேச சுகாதார தாபனத்தின் தகவல்களின் அடிப்படையில் வருடாந்தம் 20 மில்லியன் மக்கள் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக மரணங்களில் 32 வீதமான மரணங்களுக்கு இதயம் தொடர்பான, மாரடைப்பு (Heart Attack) தொடர்பான, நாள நாடிகளுடன் தொடர்பான நோய்களே காரணமாக அமைந்துள்ளன.
மாரடைப்பு (Heart Attack) எனும் கொடிய அரக்கனிடம் இருந்து மட்டுமல்ல. எமது வாழ்வை ஏனைய கொடிய நோய்களிடம் இருந்தும் பாதுகாக்க ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை முறை அவசியமாகும். நோய் வந்த பின்புதான் முக்கி முனங்கிக் கொண்டே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதல்ல. வாழும்போது எமது வாழ்வை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்ளலாம்.




Leave a Reply