அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது.
ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவ்வளவுதான். இதன் பின்பு ஒட்டுமொத்த எட்டுச் சுவனங்களின் மொத்த இன்பங்களை அவளின் காலடியில் கொட்டி வைத்தாலும் அவள் பரிதாபத்திற்குரியவள்தான்.
ஆணுக்கு வேண்டுமென்றால் திருமணம் என்பது வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக இருக்கலாம். ஆகவே, வெகு சாதாரணமாக அவனால் அதை கடந்து சென்று விட முடியும்;. ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல. அவளது இனிவரும் ஒவ்வொரு நாட்களும் அடைமழையா அனல் மழையா என தீர்மானிப்பது அந்தத் திருமணம்தான்.
அம்னா பாடசாலையின் உயர்தரத்தில் படிக்கும் போதே அவளை பெண் கேட்ட வரத் தொடங்கி விட்டார்கள். ஆனால், பெரிய பிள்ளையாகி அடுத்த நாளில் இருந்தே ஜீனத்தும்மாவின் (வாப்பாவின் தாத்தா) போர் ஆரம்பமாகிவிட்டது. எடுத்த எடுப்பக்கெல்லாம் உன் மகளை என் மகனுக்கு கட்டித்தா என முன்னால் வந்து நிற்பதும் அது பெரும் போராக உருவாகுவதும் பின்னர் வாப்பா எப்பாடுபட்டோ அதை சமாளிப்பதும் மிகப்பெரும் கனகாட்டாய் மாறிவிடும்.
ஒரு நாள் அம்னாவின் வீட்டுக்கு வாய் நிறைய பல்லுடன் வந்தார் ஜரீமா டீச்சர். ஓய்வுபெற்ற ஆங்கில டீச்சர். இப்போது முழு நேரத் தொழிலாக புரோக்கர் வேலையை செய்து கொண்டிருந்தார். அம்னாவைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார்.
வந்தவுடனேயே விசயத்தை போட்டுடைத்தார்.
‘தம்பி உங்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷடம் அடிக்கும் என நான் கனவுலயும் நினைத்துப் பார்க்கல்ல. எல்லாம் நம்மட அம்னாவின் அஹ்லாக்குக்கும் பண்பாட்டுக்கும் அறிவுக்கும் கிடைத்த பரிசுதான். நம்மட பெரிய முதலாளிதான் அவர்ட மகனுக்கு உங்கட்ட பேசிப் பார்க்கச் சொன்னார்’ என பீடிகையுடன் ஆரம்பித்தார்.
அந்த ஏரியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரிடம் இருந்து வேண்டுதல் வந்தபோது அதனை வாப்பாவால் மறுக்க முடியவில்லை. அதுவும் மாப்பிள்ளை அஸ்ஜத்தும் ஹிந்தி படங்களில் வரும் நடிகன் போல் அட்டகாசமாகத்தான் இருந்தான்.
பெரிய இடத்து சம்மதம் என்பதால் வாப்பாவுக்கு பெருமை தாங்க முடியவில்லை. மகளை ஆசைப்பட்டவாறு பெரிய படிப்பு படிக்க வைத்தாகிவிட்டாச்சு, ஊரே மூக்கில் கை வைப்பது போன்று பெரிய இடத்தில் திருமணமும் பேசியாச்சு. வேறு என்ன வேணும். மனுசனை கையில் பிடிக்கவே முடியவில்லை.
ஜீனத்தும்மாவைச் சமாளிப்பதுதான் பெரும்பாடாகிவிட்டது. ஒட்டுமொத்த குடும்பத்தினரிடமும் ஒவ்வொருவராய்ப் போய் அழுது தீர்த்தார். தனது சொந்தத் தம்பியே தன்னை ஒதுக்கிவிட்டதாக புலம்பினார். இதற்குப் பிறகு தன்னால் வாழ முடியாது என்றும் விஷத்தைக் குடித்துவிட்டு சாகப் போவதாகவும் பயமுறுத்தினார். தனது தம்பியே தன் மகனுக்கு பெண் தராவிட்டால் எந்த முகத்துடன் மற்றவர்களிடம் சென்று பெண் கேட்பது என அங்கலாய்த்தார்.
அன்று ஞாயற்றுக்கிழமை
வாப்பாவும் மகளும் சந்தைக்குப் போயிருந்தார்கள். இருவரும் திரும்பி வந்து பார்க்க வீடும் கடும் அமர்க்களமாக இருந்தது. ஜீனத்தும்மாதான் பென்னம் பெரிய கலவரத்தைச் செய்து கொண்டிருந்தார்.
வாப்பாவும் மகளும் சைக்களில் வருவதைக் கண்டதும் ஓடி வந்து முன்னால் நின்று விட்டார்.
‘தம்பீ ! எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரிந்தாகனும். உன் மகளை என் மகனுக்குத் தருவியா.. இல்லயா!’ என்றார். ஏதோ கடைக்குப் போய் உப்பு இருக்கின்றதா இல்லயா என்று விசாரிப்பதைப் போல…
வாப்பாவும் மகளும் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். வாப்பா சமாளிக்க முனைந்தார்.
‘என்ன தாத்தா நீங்க… ரோட்ல நின்று பேசுற விசயமா இது…! வாங்க வீட்டுக்குப் போய் பேசலாம்’ என்றார் பவ்வியமாக…
ஆனால் ஜீனத்தும்மா விடுவதாக இல்லை. இன்று இரண்டில் ஒன்று பார்க்காமல் விடுவதில்லை என்ற முடிவோடுதான் புறப்பட்டு வந்திருந்தார். சாரியை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்டு.. குரலின் தாளத்தைச் சற்று தடிப்பமாக்கிக் கொண்டு.. வாப்பாவின் கண்களை நேராக உற்றுப் பார்த்துக் கொண்டே திரும்பவும் கேட்டார்.
‘தம்பி எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரிந்தாகனும். என் மகனுக்கு பொண் கிடைக்காம உன்னட்ட நான் வரல்ல. எனக்கு உறவு விட்டுப் போய்டக் கூடாது என்ற பயம்தான். புரிஞ்சுக்க. எனக்கு இப்பவே ஒரு முடிவு சொல்லு. அப்பதான் இந்த ஊர் உலகத்துட வாயை அடைக்க ஏலும்’ என்றார்.
நீண்ட நேரம் தொடர்ந்து பேசியதால் அவருக்கு மூச்சு இரைத்தது.
ஜீனத்தும்மாவின் ஒரே மகன்தான் ராசிக். தங்கமான மனசுக்காரன். யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும் ஓடிப்போய் உதவுறவன். ஆனால், அவனுக்கு பேசி வரும் திருமணங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப உடைந்து போக ஒரு காரணம் இருந்தது. ஒரே ஒரு காரணம். அவனது வலது காலை விட இடது கால் கொஞ்சம் கட்டையானது. அதனால் நடக்கும் போது கொஞ்சம் எத்தி எத்தித்தான் நடப்பான். அதனால் தனது மகனுக்கு கல்யாணமே நடக்காதோ என்ற அச்சத்தால்தான் ஜீனத்தும்மா இத்தனை தூரம் ஓடி வந்து நட்ட நடு ரோட்டில் நின்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்.
தாய்ப்பாசம்…
வாப்பா எவ்வளவோ சமாளிக்கப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. அம்னாவுக்கும் என்ன சொல்வது என்றும் புரியவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்ல அங்கே கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். வேடிக்கை பார்க்க வந்தவர்கள் நடக்கின்ற கூத்தை நமட்டுச் சிரிப்புடன் இரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்த ராசிக்தான் பெரும்பாடுபட்டு ஜீனத்தும்மாவை சமாதானப்படுத்தினான்.
கல்யாணத்திற்கு நாட்கள் நெருங்க நெருங்க வாப்பா படபடக்க ஆரம்பித்து விட்டார். தன் செல்ல மகள் தன்னை விட்டு போகப் போகின்றாள் என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் அவரது கருவிழிகள் கலங்க ஆரம்பித்து விட்டன.
அன்று சனிக்கிழமை
கல்யாணத்திற்கு ஒரு வாரமே இருந்தது.
தனது தையல் கடையில் உட்கார்ந்து கொண்டு எஞ்சிக்கிடந்த துணிகளை தைத்து முடித்து விடலாம் என்று உட்கார்ந்த வாப்பாவுக்கு வேலை செய்யவே முடியவில்லை. மனம் முழுக்க மகளின் செல்லச் சிரிப்பே வலம் வந்து கொண்டிருந்தது. வேலை செய்யவும் முடியவில்லை. வீட்டுக்கு வரவும் இயலவில்லை.
மெதுவாக எழுந்து கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து பார்க்க…
நடு ஹோலில் சாய்ந்து கொண்டு ஏதோ நாவலை வாசித்துக் கொண்டிருந்த அம்னா அப்படியே தூங்கிப் போயிருந்தாள். பால்குடி மாறாத குழந்தையொன்று தன் தாயின் சேலைத் தலைப்பில் தன்னை மறந்து தூங்குவதைப் போன்று
வாப்பா மகளின் அருகே உட்கார்ந்தார். மெதுவாக அவளின் தலையை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டார். ஏதோ சலனம் கண்டு கண் விழித்த அம்னாவும் எதுவுமே நடக்காதது போல மெல்லிய கொட்டாவியை விட்டுக் கொண்டு திரும்பவும் தூக்கத்தில் தவறி விழுந்து விட்டாள்.
தனது செல்ல மகளின் தலையை மெதுமெதுவாக வருடி விடத் தொடங்கினார் வாப்பா. மனதுக்குள் என்ன என்னமோ எண்ண அலைகள் அலைமோத ஆரம்பித்துவிட்டன. சின்ன வயதில் அம்னாவுக்கு வாப்பா இல்லாவிட்டால் தூக்கம் போகாது. எத்தனை மணியானாலும் கொட்ட கொட்ட விழித்திருப்பாள். வாப்பா வந்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தால்தான் அவளுக்கு உயிர் உறங்கும்.
ஞாயற்றுக்கிழமை என்றால் அம்னாவுக்கு கொண்டாட்டம்தான். தனது சின்னஞ்சிறு வெள்ளைப் பூக்கள் பதித்த சட்டையும் பாவாடையும் அணிந்து கொண்டு வாப்பாவின் சைக்களில் ஏறிக் கொண்டால் அன்று முழுக்க ஊர்வலம்தான்.
நினைத்துப் பார்க்க ஆயிரம் கதைகள் இருந்தன. ஆனால், எதுவும் முடியவில்லை. இன்னும் சில நாட்கள் மட்டும்தான் தனது மகளில் தான் முழு உரிமை கொண்டாட முடியும் என்ற நினைவு வந்தபோது கண்ணீர் ஆறாய்ப் பெருக ஆரம்பித்துவிட்டது.
ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த உம்மா தனது மடியில் உறங்கும் தனது உயிரை அணைத்துக் கொண்டு விம்மி விம்மி அழும் கணவனைக் கண்டு நிலை குலைந்து போய்விட்டார். தனது மகள் இன்னொரு வீட்டுக்குப் போகப் போகின்றாள் என்பதை விட அவள் போய்விட்ட பிறகு இவர் என்ன பாடுபடப் போகின்றார் என்பதை நினைத்துப் பார்த்த போது அவரின் கண்களும் வழிய ஆரம்பித்து விட்டன.
ஆனால் சற்றுத் தொலைவில் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கொடிய விதி ‘இதெல்லாம் என்ன வலி. இதற்குப் பிறகுதான் கதையே ஆரம்பிக்கப் போகின்றது. உங்கள் ஒவ்வொருவரின் உயிரும் பற்றியெரியப் போகின்றது’ என்று சொல்லிவிட்டு அகோரமாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பின் பயங்கரம் தாள முடியாமல் ஒட்டுமொத்த வானமும் கருமையாய் மாறி ஆங்காங்கே இடி முழக்கங்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
Novel, Tamil short story
(தொடரும்)




Leave a Reply