ஒருவரை உண்மையாக நேசிப்பதற்கான வழிகளில் மிகப் பொருத்தமானது அவரை அறிந்துகொள்வதாகும்.
அன்பின் அல்லாஹ் பற்றி எங்களுக்கு ஏகப்பட்ட விசயங்கள் தெரியும். சிறு வயதுகளில் எமது பெற்றோர்கள் அல்லாஹ்வைப் பற்றி பல விடயங்களை சொல்லித் தந்திருப்பார்கள். பாடசாலைப் புத்தகங்களிலும் இன்னும் பல வாசிப்புப் புத்தகங்களிலும் அல்லாஹ்வைப் பற்றி அதிகம் வாசித்திருப்போம். உரைகளும் சொற்பொழிவுகளும் ஆசிரியர்களின் அறிவுரைகளும் நமக்கு அல்லாஹ்வைப் பற்றி கற்றுத் தந்திருக்கும்.
இவை தவிர.. அல்லாஹ்வைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள சில அற்புத வழிகள் இருக்கின்றன.
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள்
- நபிமார்களின், நல்லடியார்களின் வரலாறு
- எமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்
- அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி ஆராய்தல்
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் அற்புதமான கருத்துக்களை கற்றுக்கொள்ளும் போதும் அவை பற்றி ஆழமாக கற்கும்போதும் நாம் அல்லாஹ்வைப் பற்றி இன்னும் இன்னும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.
உதாரணமாக ‘அர்ரஹீம்’ என்ற திருநாமமானது அல்லாஹ்வின் அளவற்ற கருணை பற்றி நமக்கு கற்றுத் தருகின்றது. இந்த வாழ்வில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு காலெட்டிலும் அல்லாஹ்வின் அளவற்ற அன்பு நிறைந்திருப்பதை அது நினைவூட்டுகின்றது. ‘அர்ரஸ்ஸாக்’ என்ற திருநாமம் எமது அனைத்து வாழ்வாதாரங்களும் – வாழ்வதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் அல்லாஹ்வால் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது. ‘அர்ரகீப்’ என்ற திருநாமம் அல்லாஹ் எப்போதும் எம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனையை எமக்கு தந்துவிடுவதால் நாம் பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள எமக்கு உதவுகின்றது.
அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள்
அல்குர்ஆன் வசனங்களும் அண்ணலாரின் நபிமொழிகளும் அல்லாஹ்வைப் பற்றி எமக்கு இன்னும் இன்னும் அதிகமாக கற்றுத் தருகின்றன. உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் அல்லாஹ்வே அகிலத்தின் அதிபதி. அவனே எமக்கு பொறுப்புதாரி என்ற நம்பிக்கையை வலுவூட்டுகின்றது.
‘அவன் கிழக்கு மேற்குத் திசையின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்கு பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!’ (அல்குர்ஆன் 73:9)
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் அருட்கொடைகளின் பிரம்மாண்டம் பற்றி எமக்குக் கற்றுத் தருகின்றது.
‘எனதருமை அடியார்களே..! நான் உணவளிக்காவிட்டால் நீங்கள் அனைவரும் பசியோடுதான் இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் உணவளிக்கக் கேளுங்கள். எனதருமை அடியார்களே நான் ஆடை தராவிட்டால் நீங்கள் அனைவரும் ஆடையின்றியே இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் ஆடை கேளுங்கள். எனதருமை அடியார்களே ஒட்டுமொத்த மனித இனமும் ஜின் இனமும் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்களது அனைத்துத் தேவைகளையும் ஒன்றுசேர என்னிடம் கேட்டுவிட்டு, அந்தத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தால் கூட,ஒரு பெரும் சமுத்திரத்தில் ஊசி ஒன்றை முக்கி எடுத்தால் எவ்வளவு தண்ணீர் குறையுமோ அந்த அளவு கூட என்னிடம் இருக்கும் அருள்வளங்களில் இருந்து குறையாது’
அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (ரழி) நூல் : முஸ்லிம் திர்மிதி
நபிமார்களின் நல்லடியார்களின் வரலாறு
இவை போன்றே. அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நிறைந்திருக்கும் நபிமார்களின் வரலாறு, அதேபோன்று நல்லடியார்களின் வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவற்றிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி, அவனது வரம்புகளற்ற அன்பு நதி பற்றி, அவனது அருட்கொடைகள் பற்றி நாம் தெட்டத்தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஒட்டுமொத்த மரக்கட்டைகளையும் விறகுக் குவியல்களையும் ஒன்றுசேர்த்த கொடிய எதிரிகள் அதில் தீ மூட்டி பென்னம்பெரிய தீக்கிடங்கை உருவாக்கினார்கள்.
அது அனலாக கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் அனைத்துத் திசைகளிலும் வெப்பம் பரவி கொடூரமாக மாறிவிட்டது. அதன் அருகே நிற்கக் கூட அனைவரும் அச்சப்பட்டு விலகிக் சென்றார்கள். அதற்குள்தான் இறைத்தூதர் ஒருவரை தூக்கியெறி;ந்தார்கள்.
ஆனால்,
அவர் அச்சப்படவில்லை…
அலறவில்லை…
சஞ்சலப்படவில்லை…
சலனப்படவில்லை…
அல்லாஹ் என்னைப் பாதுகாக்க போதுமானவன். நான் அவனிடமே என்னிடம் பொறுப்புச் சாட்டுகின்றேன் என்று அல்லாஹ்வின் அன்பிடம் முற்றாக தஞ்சமடைந்துவிட்டார். அல்லாஹ் அவரை கைவிடவில்லை. கொடிய நெருப்பு அவருக்கு குளிர்ந்த நந்தவனமாக மாறியது. அது அவருக்கு இன்பமான இடமாக மாறிவிட்டது. துளியளவும் தீங்கின்றி, அணுவளவும் பாதிப்பின்றி அவர் திரும்பி வந்தார்.
அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்தானே..!
எமது வாழ்க்கைச் சம்பவங்கள்
இதுபோன்றுதான் எமது வாழ்க்கையிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி புரிந்து கொள்ள பல அற்புதமான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கும். பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் அல்லாஹ்வின் அன்பை இன்னும் ஆழமாக நாம் கண்டுணர்ந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு கிடைக்காத சில அருட்கொடைகள் எமக்கு மிகவும் இலகுவாக கிடைத்திருக்கும். சில ஆபத்தான சந்தர்ப்பங்களில் இருந்து அல்லாஹ் எம்மை மிக எளிதா காப்பாற்றியிருப்பான். நாம் மிகவும் ஆசைப்பட்ட விடயங்கள் எமக்கு பொருத்தமற்றது என்பதால் அது எமக்கு கிடைக்காமல் போயிருக்கும். இன்னும்.. இன்னும்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புக்கள்
அல்லாஹ்வின் அற்புதமான, நேர்த்தியான, பிரம்மாண்டமான படைப்புக்களைப் பற்றி ஆராய்ந்தாலே – அவற்றை உற்றுநோக்கினாலே நாம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அல்குர்ஆனே எம்மை அல்லாஹ்வின் படைப்புக்களை உற்றுநோக்குமாறும் அவற்றைப் பற்றி ஆராயுமாறும் ஏவுகின்றது.
இந்த பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும் நாம் அல்லாஹ்வின் அற்புதம ஆற்றலைக் கண்டு மெய்மறந்து நிற்கின்றோம்.
உயர்ந்த வானில் உட்கார்ந்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
ஆழ்கடலினுள் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் அற்புத உயிரினங்கள்
மனித உடலுக்குள் மறைமுகமாக நடைபெறும் செயற்பாடுகள்
சின்னஞ்சிறு உயிரினங்களின் விசித்திரமான வாழ்க்கை வட்டம்
என நாம் பார்க்கப் பார்க்க எம்மை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைக்கும் வகையில்தான் அல்லாஹ் இந்த விசாலமான உலகை அதிசயமாக படைத்திருக்கின்றான்.
அதனால்தான் உலகை உண்மைக் கண்களால் ஆராய்ந்த அறிஞர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள போட்டி போட்டுக்கொண்டார்கள்.
அல்லாஹ்வைப் பற்றி புரிந்துகொள்வதால் எமக்குக் கிடைக்கும் பரிசுகள் எவை?




Leave a Reply