நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்புகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதன் பட்டியல் மிக மிக நீளமானது.
அவர்களின் மகத்தான ஆளுமை, துல்லியமான திட்டமிடல், எவருக்கும் சளைக்காத வீரம் … என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவர்களின் பண்பாடுகளுக்கு நிகர் அவர்களே தான்.
உஹது யுத்தம்
முடிவடைந்துவிட்டது
நபிகள் நாயகத்தின் கண்கள் யாரையோ தேடுகின்றன. அது, உற்ற தோழராய், உள்ளம் கவர்ந்த சிறிய தந்தையாய், உயிரை விட பாதுகாத்த பாதுகாவலராய் இத்தனை நாள் அருகே நின்ற ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை
ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.. அவர்களின் உடல் கூட முழுமையாக கிடைக்கவில்லை.
ஹிந்தா எனும் கல் இதயம் கொண்ட பெண்மணி வரலாறே வெட்கப்பட்டு நாணி தலைகுனியும் அளவு சில கொடூரங்களை அரங்கேற்றி இருந்தாள்.காது மூக்கு அங்கங்களை வெட்டி மாலையாகக் கோர்த்து.. இதயத்தை பிழந்து நுரைலை வெளியே எடுத்து…
இதற்கு மேல் வர்ணிக்க என்னிடம் வார்த்தை இல்லை. ஆனால், இந்த அகோரமான காட்சியைப் பார்த்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளம் எந்த அளவு பாடு பட்டிருக்கும் என்பதை எம்மால் கற்பனை கூட பண்ண முடியுமா!
மக்காவின் சாவிகள் அனைத்தும் நபியவர்களின் காலடிக்கு வந்து விட்டன. நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு விட்டார்கள்.
இப்போது அந்த ஹிந்தா நபியவர்களை தேடி வருகின்றாள். ஆனால், நபியவர்கள் அவளை தண்டிக்கவில்லை; கண்டிக்கவும் இல்லை. பெருமனதோடு அவளை மன்னித்து விட்டார்கள்.
யாருக்கு வரும் இந்த மனம்!
நபியவர்கள் ஒருபோதும் தன்னை மற்றவர்களை விட உயர்த்திப் பார்த்ததில்லை. தன்னை உயர்த்திப் பேசியதில்லை. அவ்வளவு ஏன், சாதாரணமானவர்களை விட எளியவர்களை விட அப்பாவிகளை விட தன்னை மாறுபடுத்தி காட்டியதே இல்லை. தன்னைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து “அச்சப்படாதீர்கள், காய்ந்த ரொட்டிகளை உண்டு வாழ்ந்த சாதாரண பெண்ணின் மகன்தான் நான்” என்று மெல்லிய புன்னகையுடன் சொல்லும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.
நபியவர்கள் எந்த அளவு அமானிதமாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னை கொல்வதற்காக கூரிய வாட்களுடன் கொலைகாரர்கள் சூழ்ந்து நின்ற போதிலும் தன்னிடம் நம்பி அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பொருட்களை இன்னார் இன்னாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அலி (ரழி) அவர்களிடம் ஒப்படைத்த பின்பே மதினாவை நோக்கி காலடி எடுத்து வைத்தார்கள்.
நபியவர்கள் தனது தோழர்களோடு எவ்வாறு உரையாடினார்கள் என்பதை பார்க்கும்போது ஆச்சரியம் நேரிடுவதை தவிர்க்க முடியவில்லை.
ஒருபோதும் அவர்கள் யாரையும் யாரோடு ஒப்பிட்டு பேசியதில்லை.
எந்த ஒரு உணவையும் குறை கூறியது இல்லை. தன்னிடம் ஆண்டாண்டு காலமாக சேவை செய்த பணியாளரிடம் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட கேட்டதில்லை. அவர்கள் ஒருபோதும் தனக்குத் தேவையற்ற விடயங்களையோ பயனற்ற சங்கதிகளோ பேசியதில்லை.
முரட்டுத்தனமும் அறிவற்ற குருட்டுத்தனமும் மேலோங்கி இருந்த அந்த சமூகத்தில் எத்தனை மென்மையான வார்த்தைகளால் பேசுவது எவ்வளவு பெரிய விடயம் ..
அல்லாஹ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நற்பண்புகளை பூரணப்படுத்தவே அனுப்பியுள்ளதாக கூறுகின்றான். நபிகள் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளி கொட்டிய எதிரிகள் கூட ஒருபோதும் நபியவர்களின் பண்பாடுகளையோ ஒழுக்கத்தையோ குறை கூறியது இல்லை.
ஒழுக்கத்தை பற்றி உரையாற்றும் பலருக்கு அந்த ஒழுக்கம் இருப்பதில்லை. ஆனால், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வின் எந்தப் பக்கத்தை திருப்பினாலும் ஒழுக்கத்தை மாத்திரமே கண்டு கொள்ளலாம்.




Leave a Reply